பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்தில் நம்பிக்கையில்லை!-த்ரிஷா

சமீப காலமாக த்ரிஷா நடிக்கும் படங்கள் பற்றிய செய்தியை விட, அவரது திருமணம் குறித்த செய்திகள்தான் மீடியாவை அதிகம் ஆக்கிரமித்துள்ளன.
இதுகுறித்து த்ரிஷாவே சமீபத்தில் அளித்த விளக்கம்:
"இப்போது நான், பவன் கல்யாணுடன் பீம் ஆர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் அவருடன் எனக்கு திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, நிஜமான ஒரு திருமண மண்டபத்தை தேர்வு செய்து, தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெறுவது போல் மிக தத்ரூபமாக அந்த காட்சியை படமாக்கினார்கள். ஒருவேளை அதை யாராவது பார்த்து, எனக்கு திரமணம் நடந்துவிட்டதாக வதந்தியைப் பரப்பினார்களோ, என்னவோ?
என் மீது பொறாமை...
என்னைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருவது உண்மைதான். ஆனால் வதந்திகள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. 2002-ம் ஆண்டு லேசா லேசா படத்தில், இயக்குநர் ப்ரியதர்ஷன் என்னை அறிமுகம் செய்தார். அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதே ஆண்டில் நான் நடித்த மவுனம் பேசியதே திரைக்கு வந்தது. மிகப்பெரிய கதாநாயகிகள் கூட அதிகபட்சமாக 5 வருடங்கள்தான் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். நான் கடந்த 9 வருடங்களாக ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறேன். என் மீது பொறாமைப்படுபவர்கள்தான் அடிக்கடி இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள்.
திருமண விஷத்தில் எனக்கென்று சில கருத்துக்கள் உள்ளன. எனக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நான் திருமணம் செய்துகொள்பவரைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும். அவருடைய குணம், சுபாவம், நடத்தை எல்லாம் தெரிய வேண்டும். எனக்கு பிடித்த மாதிரி, என் பெற்றோர்களுக்கும் அவரை பிடிக்க வேண்டும். நான் காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு, என் குடும்பத்தினர் நிச்சயமாக ஆதரவு தெரிவிப்பார்கள்.
சாதி மதம் பார்க்க மாட்டேன்...
நான் திருமணம் செய்து கொள்ளும் நபர் சினிமாவை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சேராதவராகவும் இருக்கலாம். அதற்காக, நான் திட்டமிடவில்லை. இந்த விஷயத்தில், நான் சாதி-மத வேறுபாடு பார்க்க மாட்டேன். என்னை திருமணம் செய்துகொள்பவர் நிச்சயமாக ஒரு ஆணழகனாக இருக்க வேண்டும். அவரை எனக்கு பிடிக்க வேண்டும். அவருடன் நான் நீண்ட காலம் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட வேண்டும். அப்படி ஒருவர் அமைந்தால், அவரை நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன்.
ஆனால் இந்த வருடம் நிச்சயமாக என் திருமணம் நடக்காது. தமிழில், மங்காத்தா படம் இருக்கிறது. இன்னொரு பெரிய படம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று தெலுங்குப் படங்கள் உள்ளன. இதிலேயே இந்த வருடம் ஓடிவிடும். எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்களே என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது...", என்றார்.


Click it and Unblock the Notifications











