நானா ராசியில்லாதவள்? - ரோஜா காட்டம்

தெலுங்கு தேசம் மகளிர் அணி தலைவியாக இருந்த நடிகை ரோஜா அக்கட்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு விலகினார். பின்னர் அவர் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் ராஜசேகர ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் சேர முடிவு செய்தார். இந்நிலையில் ராஜசேகர ரெட்டி கடந்த 2-ந்தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். இதனால் அப்போது அவரால் காங்கிரசில் சேர முடியவில்லை.
நேற்று முன்தினம்தான் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணைந்தார் ரோஜா.
சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கங்காபவானி, பிரஜா ராஜ்ஜியம் மகளிர் அணி தலைவி ஷோபாராணி ஆகியோர், நடிகை ரோஜா ராசி இல்லாதவர். அவரை காங்கிரசில் சேர்த்தால் கட்சி உருப்படாது என்று கூறியிருந்தார்கள்.
இதற்கு நடிகை ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "என்னை ராசி இல்லாதவள் என்று பழி சுமத்தி அரசியலில் இருந்து ஓரம் கட்டி விடலாம் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
நான் தமிழில் நடித்த முதல் படம் செம்பருத்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இதே போல் நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த சமயத்தில்தான் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலின்போது நான் மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்தேன்.
நான் ராசி இல்லாதவள் என்றால் தெலுங்கு தேசம் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும்? உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகினேன்.
ராஜசேகர ரெட்டி எனும் உன்னத தலைவரின் கீழ் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது மிகுந்த வருத்தமாக உள்ளது.
ஆந்திர அரசியலில் ராஜசேகர ரெட்டியின் இடத்தை அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியால் மட்டுமே நிரப்ப முடியும். அவர் மிகவும் திறமையானவர். எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் ஆற்றலும், மக்கள் ஆதரவும் அவருக்குதான் உள்ளது. எனவே நான் ஜெகனுக்கு விசுவாசமாக இருப்பேன், என்றார்.


Click it and Unblock the Notifications











