இனி துவங்குவது என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம்! - நயன்தாரா
சினிமாவில் போதிய அளவு சாதித்துவிட்ட திருப்தி கிடைத்துவிட்டது. இனி புதிய அத்தியாயம் துவங்கப்போகிறது என் வாழ்க்கையில், என்கிறார் நயன்தாரா.
நயன்தாரா சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டார். அவரது கடைசி படம் ஸ்ரீராம ராஜ்யம் படப்பிடிப்பின் கடைசி நாளில் இதை தெரிவித்துவிட்டார் அவர்.
இனி நடிப்பதை தனது வருங்கால கணவர் பிரபு தேவா விரும்ப மாட்டார் என்றும் அவர் கூறிவிட்டார்.
இந்த நிலையில் தனது கடைசி படம் மற்றும் புதிய வாழ்க்கை குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி:
எனது வாழ்க்கையில் ராமராஜ்யம் படத்தின் கடைசி நாள் அனுபவத்தை மறக்க முடியாது. அந்த படக்குழுவினருடன் நான் முழுமையாக கலந்து விட்டேன். அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. பின்னர் படத்தில் பணியாற்றிய அனைவரும் என்மேல் அன்பும் பாசமும் காட்டினார்கள். அவர்களை பிரிய நேரம் வந்தபோது என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அழுது விட்டேன்.
ராமராஜ்ஜியம் படம் புராண கதை. ராமனுடன் சீதை சேருகிற வரலாறும், பிறகு அவர் மேலோகம் செல்வதும் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. நான் ராமாயண கதையை படித்து உள்ளேன். அந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுபோன்ற புராண படங்களில் அம்மன் வேடத்தில் நடிக்கும் நடிகைகள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டதை அறிந்துள்ளேன். தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று ஒழுக்க நெறியை கடைபிடித்து உள்ளேன். நானும் அதுபோல சைவம் சாப்பிட்டேன்.
இனி நான் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளமாட்டேன். எனது வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயத்துக்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவை மிக சந்தோஷமாக எடுத்துள்ளேன்.
என் வாழ்க்கையில் அடுத்து நடப்பது முக்கியமான விஷயம் (பிரபுதேவாவுடன் திருமணம்). அது உறுதியானதும் உங்களுக்கு (ரசிகர்களுக்கு) சொல்கிறேன், என்று கூறியுள்ளார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











