மட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்! - அஜீத்

கார் ரேஸில் பிஸியாக உள்ள அஜீத், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.
படங்கள் ஓடாததால்தான் ரேஸுக்குப் போய்விட்டீர்களா என்ற கேள்விக்கு அஜீத் பதிலளிக்கையில், "நான் இதுவரை நடிச்ச அத்தனை படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை.
அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.
என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!" என்றார்.
அஜீத் குமார் அரசியல்வாதி ஆவாரா என்ற கேள்விக்கு, "இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான்.
கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் சர்வைவ் பண்ணணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன் பாஸ்.
ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?'' என்று கூறியுள்ளார் அஜீத்.


Click it and Unblock the Notifications











