twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த் வருவார்... திரையுலகை ஆள்வார்! - கவிஞர் வைரமுத்து

    By Shankar
    |

    Vairamuthu
    சென்னை: "ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

    ரஜினி உடல்நிலை பற்றி அவரது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

    "உள்ளூர் தமிழர்கள் பலரும், உலக தமிழர்கள் சிலரும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து என்னோடும், என் அலுவலகத்தோடும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த கவலை தெரிவிப்பதனால் இந்த அறிக்கை வெளியிட நேர்கிறது.

    அனைவருக்கும் ஆறுதல் வழங்கும் என்பதனால் மருத்துவமனைக்கே நேரில் சென்று திரட்டிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பரபரப்பாக பரப்பப்படும் அளவுக்கு அவர் உடல்நிலை சீர்கெடவில்லை.

    பக்க விளைவுகள்

    நுரையீரல் தொற்று காரணமாக அவரது சுவாசத்தில் சிறிது சிரமம் ஏற்பட்டது என்றும், அதனால் நேர்ந்த சிறிய பக்கவிளைவுகளுக்கு அவர் உரிய மருந்து உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு உடற்சோர்வு உள்ளது. மனச்சோர்வு இல்லை.

    குடும்ப உறுப்பினர்களைப்போல் மருத்துவர்களும், மருத்துவர்களைப்போல் குடும்ப உறுப்பினர்களும் அவரை பொறுப்போடும், பரிவோடும் பார்த்துக்கொள்கிறார்கள்.

    13-ம் தேதி என்னோடு பேசிய ரஜினி...

    வதந்திகளை பரப்பாதீர்கள். நம்பாதீர்கள். அவரை பற்றிய மிக மோசமான வதந்தி பரப்பப்பட்ட 13-ந் தேதி மாலை 6-10 மணிக்கு என்னோடு அவர் தொலைபேசியில் பேசினார். தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்துகளை சிறிது நேரம் என்னோடு பகிர்ந்து கொண்டார்.

    வதந்தி பற்றி நானும் சொல்லிக்கொள்ளவில்லை. அவரும் கேட்டுக் கொள்ளவில்லை. மறுநாள் அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறியப் பெற்றேன்.

    நவீன மருத்துவம்

    "நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என்பதனால் மருத்துவர் குழு, அவர் நோய்க்கான வேர்களை ஆய்ந்து வருகிறது.

    நவீன மருத்துவத்தின் மீதும், நம் நாட்டு மருத்துவர்களின் மீதும் நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. ரஜினி விரைவில் மீண்டு வருவார். தமிழ் திரையுலகை தொடர்ந்து ஆண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்பலாம்.

    உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

    English summary
    Poet Vairamuthu, one of the very close friend of Rajini has requested fans not to go for a wrong decision based on Rajini health rumours. According to him, he is very fine and stable.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X