வதந்தி பற்றிக் கவலையே இல்லை-காஜல்
என்னைப் பற்றி வரும் வதந்திகள், கிசுகிசுக்கள் குறித்து நான் கவலையே படுவதில்லை என்கிறார் காஜல் அகர்வால் படு கேஷுவலாக.
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் காஜல் அகர்வால். இருப்பினும் பழனி படம்தான் இவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது நான் மகான் அல்ல மூலம் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் தனது நிலையை ஸ்திரப்படுத்த ஆர்வமாக உள்ளார்.
படத்தில் கார்த்தியுடன் படு நெருக்கமாக நடித்துள்ளாராம் காஜல். இதை வைத்து வதந்திகள் கிளம்பும் அளவுக்கு நெருக்கமாக நடித்துள்ளாராம். அப்படி கிளம்பினால் கவலை இல்லையா என்று காஜலிடம் கேட்டால், வதந்திகள் பற்றி பொதுவாக நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. முதலில் கேட்கும் போது சங்கடமாக இருக்கும். வருத்தப்படுவேன். ஆனால் பின்னர் அதை மறந்தே போய் விடுவேன்.
என்னைப் பற்றி என்னைப் பெற்றவர்களுக்குத் தெரியும். எனவே நான் இப்போதெல்லாம் இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. அது என்னைப் பாதிக்கவும் செய்வதில்லை.
என்னுடன் நடிப்பவர்களுக்கும், எனக்கும் இதுதொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படாத வரைஇதுகுறித்து நான் கவலையே பட மாட்டேன் என்கிறார் கூலாக.
சரி காஜலுக்கு ரொம்பப் பிடித்த நடிகை யார் தெரியுமா?. ஜோதிகாவாம். அதுகுறித்து காஜல் கூறுகையில், நடிப்பிலும், குடும்ப வாழ்க்கையிலும் ஜோதிகா காட்டும் ஈடுபாடு என்னை வியக்க வைக்கிறது. உச்சத்தில் இருந்தபோது தடாலடியாக திரையுலகை விட்டு விலகியவர் ஜோதிகா. அந்த தைரியம் யாருக்கும் வராது. இப்போது குடும்ப வாழ்க்கையிலும் அவர் பிரமாதமாக நடந்து கொள்கிறார் என்பதை கேள்விப்படும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இதனால்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் வியப்பில் விழிகள் விரிந்த நிலையில்.
காஜலுக்கு சார்லிஸ் ஏஞ்செல்ஸ் போல அதிரடியான பெண்ணாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.
யாராவது நிறைவேத்தி வையுங்களேன்...!


Click it and Unblock the Notifications











