மனிதனை மட்டும் நம்புங்கள்! - சேரன் அட்வைஸ்
கடவுளை நம்பி எந்த பயனும் இல்லை. எனவே மனிதனை நம்புங்கள்... மனிதனுக்கு மனிதன்தான் உதவி செய்வான், என்றார் இயக்குநர் சேரன்.
'ஆண்மை தவறேல்' என்ற புதிய படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் புதன்கிழமை காலை நடந்தது. பாடல் குறுந்தகடை, தயாரகிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, நடிகர் ஆர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில், இயக்குநர் சேரன் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேசுகையில், "ஆண்மை தவறேல் என்றால், ஆண்களின் ஆண்மையை குறிப்பதல்ல. மனைவியை திருப்திபடுத்துவது மட்டும் ஆண்மை என்று கூற முடியாது. ஒரு ஆண்மகனின் குணாதிசயங்களை குறிக்கும் படம் இது.
இந்த படம் நூறு நாட்கள் ஓடவேண்டும் என்று கடவுளை நான் வேண்டவில்லை. ஏனென்றால், இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை. இறைவன் ஏதாவது செய்வான் என்று நம்பி ஏமாறுவதை விட, மனிதர்களை நம்பலாம்.
மனிதர்களுக்கு, மனிதர்கள்தான் உதவி செய்வார்கள். இறைவன் வந்து உதவி செய்யப்போவதில்லை...,'' என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர் கே.முரளிதரன், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.சீனிவாசன், நடிகர் ஆர்யா ஆகியோரும் பேசினார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் கமல்நயன் வரவேற்று பேசினார். இயக்குநர் குழந்தை வேலப்பன் நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











