திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்!-நவ்யா நாயர்

பிரபல தமிழ் - மலையாள நடிகை நவ்யா நாயர். அழகிய தீயே மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
இவருக்கும் கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனனுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எம்.பி.ஏ. பட்டதாரியான சந்தோஷ் மேனன், மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில், துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இது, இரண்டு பேரின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும். திருமண தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இப்போது, நவ்யா நாயர்-சந்தோஷ் மேனன் ஆகிய இருவருக்கும் வருகிற ஜனவரி 21-ந் தேதி காலை 9 மணிக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள சேப்பாடு என்ற இடத்தில் கேரள முறைப்படி திருமணம் நடக்கிறது.
அன்று மாலை 6 மணிக்கு, சங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அதில், மலையாள பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டு நவ்யா நாயரையும், சந்தோஷ் மேனனையும் வாழ்த்துகிறார்கள்.
நடிப்பு தொடரும்...
திருமணத் தேதி வெளியான கையோடு, திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பதாக நவ்யா நாயர் கூறியுள்ளார்.
"திருமணத்துக்கு பிறகு நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் என் வருங்காலக் கணவர் சந்தோஷ் மேனன், தொடர்ந்து நான் படங்களில் நடிக்க அனுமதி அளித்துள்ளார்.
எனவே நடிப்பைத் தொடரப் போகிறேன்" என்கிறார் நவ்யா.
இப்போது மம்முட்டி, சுரேஷ் கோபி, திலீப் ஆகிய ஹீரோக்களுடன் மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை தவிர, 'கவுரவர்கள்' என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











