ஆன்ட்ரியாவைப் பார்த்து பயப்படுகிறேனா..? - சோனியா அகர்வால் கோபம்
"சினிமாவில் யாரைப் பார்த்தும் நான் பயந்ததில்லை. குறிப்பாக ஆன்ட்ரியாவைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். அவருக்காக எந்த வாய்ப்பையும் உதறிவிட மாட்டேன்," என்றார் நடிகை சோனியா அகர்வால்.
மலையாளத்தில் ஒரு படத்தில் மோகன்லாலுடன் நடிக்க சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஆன்ட்ரியாவும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். முதலில் ஒப்புக் கொண்ட சோனியா அகர்வால், பின்னர் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஆன்ட்ரியா நடிப்பதால்தான் சோனியா நடிக்க மறுத்தார் என்று செய்தி பரவியது. ஆன்ட்ரியா குறுக்கிட்டதால்தான் சோனியா - செல்வராகவன் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக ஒரு பேச்சு உள்ளது. எனவே திருமண வாழ்க்கையைக் கெடுத்த ஆன்ட்ரியா, இப்போது சினிமா வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கிறார் என்ற ரீதியில் செய்தி வெளியாகின.
இந்த நிலையில், சோனியா அகர்வாலிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.
அவர் கூறுகையில், "பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றுதான் இப்போது மிகவும் விரும்புகிறேன். ஆனால், இந்தப் படத்தின் கதையில் என் பாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நமக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத ஒரு படத்தில் நடித்து என்ன ஆகப்போகிறது. அதனால்தான் நடிக்கவில்லை.
ஆனால் ஆன்ட்ரியாவுக்காக நான் நடிக்கவில்லை என்பது தவறு. சினிமாவில் யாரைப் பார்த்தும் நான் பயப்படமாட்டேன். அதிலும் ஆன்ட்ரியாவைப் பார்த்து நிச்சயம் நான் பயப்பட மாட்டேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











