செல்வராகவனுடன் மோதலா? - ரீமா சென்

செல்வராகவன் இயக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' பட வெளியீடு, சிந்துபாத் கதை மாதிரி இழுத்துக் கொண்டே போகிறது.
கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிக்கும் இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன் துவங்கியது. ஆனால் படப்பிடிப்பு நாட்கள் நீண்டதால் அதில் நடித்தவர்கள் வேறு படங்களுக்கு செல்ல முடியவில்லை.
குறிப்பாக ரீமாசென் அந்த ஒரு படத்திலேயே முடங்கினார். வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவரால் போக முடியவில்லை. நடிகைகளின் கேரியருக்கு தமிழில் ஆயுசு வெகு குறைவு என்பதால், கைநழுவிப்போன வாய்ப்புகளை நினைத்து ரீமா கலங்குவதாக தகவல் பரவியது. இதனால் செல்வராகவனுக்கும் ரீமா சென்னுக்கும் கடும் மோதல் எழுந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ரீமா சென் கூறுகையில்,
"ஆயிரத்தில் ஒருவன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையான விஷயம். இந்தியா முழுக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு செல்வராகவன் மடடுமே காரணமல்ல. இதற்காக நான் செல்வராகவனுடன் சண்டை போட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
இன்னும் சில வாரங்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்துவிடும் என நம்புகிறேன்", என்ற ரீமா சென், விஷாலுடன் நடிக்கவிருந்த தீராத விளையாட்டுப் பிள்ளை வாய்ப்பையும் உதறிவிட்டாராம்.
"குறிப்பாகக் காரணம் என எதையும் சொல்ல விரும்பவில்லை. இந்தப்படம் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதனால் விலகிவிட்டேன்", என்றார் ரீமா.


Click it and Unblock the Notifications











