பால் தாக்கரே மருமகள் தயாரிக்கும் 'பாபர் மசூதி' சினிமா!

சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயின் இரண்டாவது மகன் ஜெய்தேவ் தாக்கரே. இவரைக் காதலித்து மணந்தவர் ஸ்மிதா தாக்கரே. தற்போது இந்தத் தம்பதியர் பிரிந்து விட்டனர்.
ஸ்மிதா தாக்கரே, இந்திப்பட தயாரிப்பாளராக உள்ளார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட பாபர் மசூதி பற்றி ஒரு இந்தித் திரைப்படம் தயாரிக்கிறார் ஸ்மிதா.
அமீர்கான் உதவியுடன்...
இந்தப் படம் குறித்து ஸ்மிதா கூறுகையில், "பாபர் மசூதி இடிப்பினை அடிப்படையாகக் கொண்டு ஒரு இந்திப் படம் தயாரிக்கிறேன். இந்தப் படத்தின் திரைக்கதை தொடர்பாக நடிகர் அமீர்கானை 5, 6 முறை சந்தித்துப் பேசினேன். படத்தின் திரைக்கதை அமைப்பில் அவர் சில யோசனைகளைச் சொன்னார்.
தற்போது பல படங்களில் நடித்து வருகிற நிலையில், அமீர்கான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. நான் எந்த நோக்கத்தில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்பதை அறிந்து, அவர் என்னைப் பாராட்டினார். நடிகர் அஜய் தேவ்கன் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
அரசியல் கிடையாது..
இந்தப் படத்தில் அரசியல் கிடையாது. அரசியல் கோணத்தில் நான் இந்தப் படத்தை தயாரிக்க வில்லை. சாமானிய மக்களின் கருத்துப் பின்னணியில்தான் இந்தப் படம் அமையும்.
படப்பிடிப்பு 3 மாதங்களில் தொடங்கும். ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிந்து விடும். பாபர் மசூதி வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன் இந்தப் படத்தை திரையிட முடிவு செய்துள்ளேன்," என்றார்.
படத்துக்கு 'பாப்ரி' என தலைப்பிட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு சம்பத்தில் சதியாளர்களில் ஒருவராக சிவசேனதைத் தலைவர் பால் தாக்கரே சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிலை உச்சநீதிமன்றம் கேட்டுள்ள நிலையில் இந்தப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணம் காய்க்கும் மரமாக இருக்கும் வரை மதவாதம் ஏதாவது ஒரு உருவில் தொடரும் போலிருக்கிறது!


Click it and Unblock the Notifications











