இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? - பாலா

By Staff

Janani Iyer
நான் தேசிய விருது பெறக் காரணம் 'நான் கடவுள்' யூனிட்டும், அதில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்களும்தான். இதில் இல்லாத கடவுளுக்கு நான் எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? என்றார் இயக்குநர் பாலா.

'நான் கடவுள்' படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலா அடுத்ததாக, 'அவன்-இவன்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஷால்-ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். அம்பிகா, ஜெயபிரபா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார்.

இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் பாலா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...

இது எந்த மாதிரியான படம்? குடும்பப் படமா? ஆக்ஷன் படமா?

ஆக்ஷன், நகைச்சுவை கலந்த குடும்பப் படம் இது.

அவன்-இவன், அண்ணன்-தம்பி கதையா, நண்பர்களின் கதையா?

அண்ணன்-தம்பி கதைதான்.

விஷால்-ஆர்யா இரண்டு பேரில் அவன் யார், இவன் யார்?

அவன் (விஷால்) இங்கே வந்துட்டார். இவன் (ஆர்யா) இனிமேல்தான் வருவார்.

வெற்றிபெற்ற கதாநாயகர்களை வைத்தே படம் டைரக்டு செய்கிறீர்களே...புதுமுகங்களை வைத்து ஏன் டைரக்டு செய்வதில்லை?

என் முதல் படம் சேது எடுத்தபோது, விக்ரம் கிட்டத்தட்ட புதுமுகம்தான். இரண்டாவது படம் நந்தா எடுத்தபோது, தம்பி சூர்யாவும் கிட்டத்தட்ட புதுமுகம்தான். அந்த படங்களுக்கு பிறகுதான் அவர்கள் வெற்றிபட கதாநாயகர்கள் ஆனார்கள்.

இந்தப் படத்தில் சூர்யா-கார்த்தி நடிக்க இருந்ததாகவும், உங்கள் மீதுள்ள பயத்தில் நடிக்க மறுத்ததாகவும் சொல்கிறார்களே...

சூர்யாவும் கார்த்தியும் என் தம்பிகள். அண்ணனைப் பார்த்து தம்பிகள் எதற்காகப் பயப்படப் போகிறார்கள்... இந்தக் கேள்வியை நீங்க அவங்ககிட்ட கேட்டிருக்கீங்களா?

உடல் ஊனமுற்றவர்கள் வாழ்க்கையில் தோல்வி அடைவது போல் 'நான் கடவுள்' படத்தில் சித்தரித்து இருந்தீர்கள். அது சரிதானா?

அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கதை அமைந்தது அப்படி. அவர்கள் வெற்றி பெறுவது போல், ஒவ்வொரு பூக்களுமே... என்ற பாடலில் சேரன் ஏற்கனவே காண்பித்து விட்டார். அதையே நான் திரும்ப காட்ட வேண்டும்?

தேசிய விருது பெற்றதற்காக நீங்கள், கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?

'நான் கடவுள்' படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர்-நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள், தொழிலாளர்கள். இந்த யூனிட்தான் இந்த விருதுக்கு காரணம்... இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?.

கடந்த ஆண்டு வெளியான படங்களில், வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

நான் தியேட்டருக்குப்போய் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. திருட்டு வி.சி.டி.யிலும் படம் பார்ப்பதில்லை. ஏன் தியேட்டருக்கு போவதில்லை என்றால், ஒரு படம் சீரியசாக ஓடிக் கொண்டிருக்கும்போது, படம் பார்க்க வந்த சிலர் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது, எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை பார்த்தால், ஓடிப் போய் அடிக்க தோன்றுகிறது. அந்த பயத்தில்தான் தியேட்டருக்கு போவதில்லை. படங்களை பார்க்காமல் கருத்து சொல்லக்கூடாது என்றார் பாலா.

பின்னர், " உங்களுக்கெல்லாம் ஒரு ஷாக்கிங் நியூஸ்... இந்தப் படத்தை இரண்டு கட்டமாக படமாக்கி, 6 மாதங்களுக்குள் ரிலீஸ் செய்யப் போகிறேன்..." என்றார் சிரித்தபடி.

பேட்டியின்போது நடிகர் விஷால் தவிர, நடிகைகள் அம்பிகா, ஜெயபிரபா, ஜனனி அய்யர், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், வசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன், பட அதிபர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X