ரஜினி அங்கிளைச் சந்தித்தேன்... சூப்பரா இருக்கார்! - மோகன்பாபு மகள்
ரஜினியை வீட்டில் போய் சந்தித்தேன். அவர் நலமுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் உள்ளார் என்று நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி தெரிவித்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்ற ரஜினி கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பினார். அதன் பிறகு அவர் போயஸ் கார்டன் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு ஆகியவற்றில் ஓய்வெடுத்து வருகிறார்.
இடையில் ராணா பட வேலைகளையும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள், படத்தின் இசை, காட்சியமைப்புகளில் மாற்றம், உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் போன்றவற்றை ரஜினி ஆலோசனையுடன் இயக்குநர் ரவிக்குமார் முடிவு செய்து வருகிறார்.
இடையில் ரஜினி தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள், வைரமுத்து, எஸ்பி முத்துராமன் போன்ற திரையுலகப் பிரமுகர்களை மட்டும் சந்தித்துப் பேசினார். ஆனால் அதுகுறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரமுகருமான மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி, சில தினங்களுக்கு முன் ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் லட்சுமி குறிப்பிடுகையில், "ரஜினி அங்கிளை சென்னையில் சந்தித்தேன். சூப்பராக இருக்கிறார். முன்பைப் போலவே உற்சாகமாகவும் நலமாகவும் உள்ளார். அவரை பார்த்ததே மிகவும் சந்தோஷமாக இருந்தது. நம்ம சூப்பர் ஸ்டார் அதே மாதிரி ஸ்ட்ராங்காக திரும்ப வந்துவிட்டார். விரைவில் அவரது படத்தை வெளியிடுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











