நாட்டை ஆளவேண்டும் என்றால்.. அதற்கு அரசியல் அறிவு வேணும்.. அது விஜயிடம் இருக்கா?.. கருணாஸ்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சிவகங்கை தொகுதியில் கருணாஸ் போட்டியிட உள்ளார். அந்த பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நடிகர் கருணாஸ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு இல்லை, ஆனால், நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என நினைப்பது தவறு என்றார்.
ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்தும், விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் கருணாஸ் பேசினார். அப்போது, எல்லா படங்களும் தான் இணையத்தில் வெளியாகிறது என் படம் கூட இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அன்றைக்கெல்லாம் யாரும் எந்த கேள்விக்கும் கேட்கவில்லை. தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் தயாரிப்பாளருக்கு தெரியாமல் ஓடிடியில், திருட்டு வலைதளங்களில் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அதையும் மக்கள் பார்த்தார்கள். கோடிக்கணக்கான செலவு செய்து, வீடு வாசல் அனைத்தையும் விற்று படத்தை கஷ்டப்பட்டு படத்தை எடுத்தால், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருட்டுத்தனமாக வீட்டிலேயே உட்கார்ந்து பார்க்கக் கூடிய மனநிலையும் மக்களிடம் இருக்கிறது.

நடிகர் கருணாஸ்: அப்படி வெளியான படங்களில் இதுவும் ஒரு படம் இது பற்றிய பெரிதாக பேசுவதற்கு எதுவுமே இல்லை. நடிகர் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய கருணாஸ், எம்ஜிஆர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார். ஆந்திராவை நடிகர் என்டிஆர் ஆட்சி செய்திருக்கிறார். அது பிரச்சனை இல்லை, அவர்கள் நாட்டை ஆண்டார்கள் என்றால் அதற்காக அரசியல் அறிவைப் பெற்று, திராவிட இயக்கத்தில் எம்ஜிஆர் நீண்ட பயணம் செய்து, அதில் பொறுப்பில் இருந்து, மக்களை சந்தித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பலவற்றில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தார்கள்.
சீப்பான எண்ணம்: ஆனால், நீங்கள் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு அதில் 48 பேரை சாக அடித்தீர்கள். இனி எத்தனை பொதுக்கூட்டம் போட்டு எத்தனை மக்களை சாகடிக்க போகிறீர்கள். இதுதான் இங்கு இருக்கக்கூடிய பிரச்சனை, நடிகர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இவர் வரவேண்டும், அவர் வரவேண்டும் என்பதெல்லாம் இல்லை. வருவதற்கு முன் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வந்த பின் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாது. நாங்கள் எதையுமே செய்ய மாட்டோம் அறைக்குள்ளேயே அமர்ந்து கொண்டு, நேரடியாக முதலமைச்சராக நினைப்பது ரொம்ப சீப்பா இருக்கு என கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











