Suriya: ஜோதிகா இல்லாத என் வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியல.. பாலய்யாவிடம் எமோஷனலான சூர்யா!
ஹைதராபாத்: நடிகர் சூர்யா நடிப்பில் ஒரு படம் தியேட்டரில் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கங்குவா. இப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோசன் வேலைகளை கடந்த சில வாரங்களாகவே படக்குழு நடத்தி வருகின்றது. இந்நிலையில் கங்குவா படத்தின் புரோமோசனை மையப்படுத்தி, நடிகர் சூர்யாவை தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் பாலய்யா பேட்டி எடுத்துள்ளார். அந்த பேட்டியின் ப்ரோமோ இணையத்தில் வேகமாக பரவுகின்றது.
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். படம் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறுவதைப்போல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ.பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டுவிழா அண்மையில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல், இசை வெளியீட்டு விழா முடிந்த பின்னர், டிசம்பரில் படத்தின் வெற்றிவிழா இதே நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

படத்தினை வரும் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரவேண்டிய ரூபாய் 55 கோடிகளை கொடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. வரும் 14ஆம் தேதிக்குள் பணத்தினை ஞானவேல் ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கங்குவா: தென்னிந்திய சினிமா உலகிலேயே மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட சினிமா உலகம் என்றால் அது தெலுங்கு சினிமா உலகம்தான். அங்குதான் ஒரு படம் மிகச்சுலபமாக ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்து விடுகின்றது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில், கங்குவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதே எதிர்பார்ப்பினை தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உருவாக்கவும், ஏற்கனவே உள்ள எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கவும் படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.
பாலய்யா: அந்தவகையில், ஆஹா ஓடிடி நிறுவனம் ஒரு சிறப்பு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நேர்காணலில் சூர்யாவை தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான பாலய்யா பேட்டி எடுக்கின்றார். அன்ஸ்டாப்பபிள் என்ற பெயரில் இந்த பேட்டி வரும் 8ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இந்த பேட்டியின் ப்ரோ தற்போது ஆஹா ஓடிடி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் இந்த பேட்டியில், பாலய்யா சூர்யாவை வறுத்து தாளித்துவிட்டார் என்றே கூறவேண்டும்.
ஜோதிகா: இந்தப் பேட்டியில் சூர்யா குறித்து ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் விஷயங்களை கேள்வியாக பாலய்யா கேட்டார். குறிப்பாக கார்த்தியின் மொபைலில் சூர்யாவின் எண்ணை என்னவென்று சேவ் செய்து வைத்துள்ளார் எனக் கேள்வி கேட்டார். அதேபோல் ஜோதிகா பற்றி பேசும்போது, " ஜோதிகா இல்லாத என் வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை" எனக் கூறினார் சூர்யா. அப்போது மிகவும் எமோஷனல் ஆனார். இதுவும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மேலும் அகரம் குழந்தைகள் குறித்து பேசுகையில் சூர்யா அழுதுவிட்டார். இந்தப் பேட்டியில் பாபி தயாள் மற்றும் சிறுத்தை சிவாவும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











