நாட்டாமை நான் பண்ண வேண்டியது.. சந்தனம் வெச்சு நடிப்பது எனக்கு செட்டாகாது.. பார்த்திபன் சொன்ன தகவல்!
சென்னை: சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் என்றால் அது நாட்டாமை திரைப்படம் தான். அந்த படத்தில் இரட்டை வேடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சரத்குமார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது. ஆனால், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது பார்த்திபன் என்ற தகவலை அவரே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நாட்டாமை. இந்த படத்தில், குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி ஆகியோர் நடித்திருந்தனர். இதில், ஊரின் நாட்டாமை சரத்குமாரும் அவரின் நீதிக்கு கட்டுப்பட்டு ஊர் மக்கள் அனைவரும் தலைவணங்குவார்கள். 1994ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நாட்டமை என்றால் அது சரத்குமார் தான் என இன்று வரைக்கும் பலர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பார்த்திபன் பேட்டி: இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் பார்த்திபன் ஒரு ரகசியத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, நாட்டாமை படத்தில் நடிக்க முதல் முதலாக எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. ஆனால், நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். சொம்பு வைத்துக் கொண்டு, சந்தனம் பூசிக்கொண்டு பஞ்சாயத்து செய்வது காமெடியாக இருக்கும், எனக்கு அது, ஒத்துவராது என்று சொல்லிவிட்டேன் என, சரத்குமாரிடம் ஒருமுறை இதை பற்றி கூறினேன். அதை கேட்டு அவர், இதை யாருமே எனக்கு சொல்லவில்லையே என்று ஆச்சரியமாக பார்த்தார். ஏன் என்றால், சரத்குமார் தனக்குத்தான் அந்த படம் முதன் முதலில் வந்ததாக நினைத்துக்கொண்டு இருந்தார்.

யாரும் உதவல: இதை சொல்வதற்கு காரணம், நானும் சினிமாவும் மட்டுமே தனி குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். எந்த ஒரு உதவியும் கிடையாது. யாருடைய பெரிய பங்களிப்பும் இல்லை. நான் ஒவ்வொரு படம் எடுக்கும்போதும், அடுத்த படத்தில் வீடு வாங்கி விடலாம் என நினைப்பேன். ஆனால், இப்போது வரைக்கும் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். இந்த வீட்டை விற்று படம் எடுக்கவில்லை, அதற்கு வீட்டின் உரிமையாளர் ஒத்துக்கொள்ள மாட்டார். அப்படி, அவர் ஒத்துக்கொண்டால், இந்த வீட்டையும் விற்று படம் எடுத்திருப்பேன். படம் என்பது எனக்கு வெறும் படம் கிடையாது. யாரோ ஒருவர் கொடுத்த பணத்தில், என்னுடைய கிரியேட்டிவிட்டியை சொரிந்து விட்டுப் போகும் படமாக அது இருக்கக் கூடாது. லைஃப் அண்ட் டெத் படமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.
மிகப்பெரிய வருத்தம்: புதிய பாதை படம் வெளியான போது நான் எந்த மாதிரியான விளம்பரத்தை பயன்படுத்தினேனோ அதையே இப்போது வரை பயன்படுத்தி வருவதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த சினிமாவில் 35 வருடம் பயணித்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு நிலைத்து இருப்பது என்பது உண்மையில் பெரிய கஷ்டமான விஷயம் என்று அந்த பேட்டியில் நடிகர் பார்த்திபன் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











