என் திருமணத்தை பார்க்க அப்பா இல்லையே.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. ரஜேஷின் மகன் குமுறல்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராஜேஷ் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ராஜேஷின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நல்ல நண்பர் ராஜேஷ் மறைவு தன்னை ரொம்பவே வேதனையில் ஆழ்த்தி விட்டது என பதிவிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். நடிகர் ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா கடந்த 2012ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அம்மாவின் மறைவுக்குப் பிறகு தன்னையும் தனது சகோதரியையும் பார்த்துக் கொண்டது அப்பா தான். இப்போ என்னோட அப்பாவும் என்னை விட்டுட்டு போய்விட்டாரே என குமுறிவிட்டார்.

35 வயதாகும் ராஜேஷின் மகன் தீபக் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என போராடி வருகிறார். அவர் நடித்த படத்தையும் அப்பாவுக்கு மட்டும் போட்டுக் காட்டினேன் என்றும் அடுத்த வாரம் தன்னுடைய நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், அப்பா இறந்துவிட்டார் என்றும் உருகியுள்ளார்.
நல்ல மனிதர் ராஜேஷ்: அவள் ஒரு தொடர்கதை படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜேஷ் நல்ல நடிகராகவும், அந்த காலத்தில் இருந்தே பல சினிமா பிரபலங்களுடன் நெருங்கி பழகி நல்ல மனிதராகவும் திகழ்ந்தவர். பணம் தான் மனிதனுக்கு ரொம்பவே முக்கியமானது என்பதை புரிந்துக் கொண்ட ராஜேஷ் நடிப்பதை தாண்டி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிசினஸிலும் அதிக ஆர்வம் காட்டி மிகப்பெரிய தொழிலதிபராகவும் திகழ்ந்தார்.
கெட்ட பழக்கமே இல்லை: சிகரெட் பிடித்தால் நுரையீரல் கெட்டுப்போய்விடும், சரக்கு அடித்தால் குடல் அழுகிவிடும், பொம்பள சகவாசம் வைத்துக் கொண்டால் வேறு ஏதாவது கொடிய நோய் வந்துவிடும் என்கிற பயம் காரணமாகவே மது, மாது, புகை என எந்தவொரு கெட்டப்பழக்கம் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சில விஷயங்களில் பயந்தால் தான் வாழ்க்கையில் நல்லா இருக்க முடியும் என்ற ராஜேஷ் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அப்பா இப்படித்தான் இறந்தார்: நடிகர் ராஜேஷுக்கு திவ்யா என்கிற மகளும் தீபக் என்கிற மகனும் உள்ளனர். மகளை பல வருடங்கள் முன்பாகவே கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டார். மகன் தீபக் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதால், திருமணத்தை தள்ளிப் போட்டு வந்திருக்கிறார். ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்த வாரம் மகனின் நிச்சயதார்த்தை நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த ராஜேஷ், நேற்று இரவே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். "அப்பாவுக்கு நேத்து நைட் மூச்சுத் திணறியது, அப்பவே ஹாஸ்பிட்டல் போகலாம் என்றேன். ஆனால், அவர்தான் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த அயற்சி தான் என்றும் டேபிளட் போட்டால் சரியாகிவிடும் என்றார். அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து வந்து தனக்கு ரொம்பவே மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக கூறிய உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன். மாடியில் இருந்து அப்பாவை தூக்கிக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றும் போதே அவரது உயிர் பிரிந்து விட்டது.
அவர் ஆசையை நிறைவேற்றுவேன்: 'லக்கா மாட்டிக்கிச்சு' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். என் படத்தோட ஃபர்ஸ்ட் காப்பி ரெடி. அப்பாவுக்கு மட்டும் தான் போட்டு காட்டியிருக்கேன். படம் நல்லா இருக்கு, சில குறைகள் டப்பிங்கில் இருக்கு, இதையெல்லாம் சரி பண்ணிக்கோ நல்லா வருவன்னு சொன்னார். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. என்னோட திருமணத்தை பார்க்க ரொம்பவே ஆசைப்பட்டார். ஆனால், அதற்குள் என்னை விட்டுச் சென்று விட்டார். அவர் ஆசைப்பட்டப்படியே சினிமாவில் நல்ல நடிகனாக வருவேன் என தீபக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











