விவேக்கின் இறுதிச்சடங்குக்கு ஏன் போகல.. வடிவேலு எமோஷனல்.. மொத்த பாரத்தையும் இறக்கி வச்சிட்டாரு!
சென்னை: நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் இருக்க கூடிய சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அவரை காமெடி நடிகராக பார்க்க ரசிகர்கள் பலரும் விரும்புகிறார்கள். இவரது நடிப்பில் இன்று அதாவது, ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள கேங்கர்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வடிவேலு, தான் மறைந்த நடிகர் விவேக்கின் மறைவின் போது தான் ஏன் போகவில்லை என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரைச் சுற்றி பல பிரச்னைகளும், பதில்கள் கிடைக்காத பல கேள்விகளும், விமர்சனங்களும் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான விமர்சனங்களில் ஒன்று, சுந்தர் சி, உடன் அவர் இணைந்து பணியாற்றாமல் இருக்க காரணம். இது தொடர்பாக திரைத்துறையில் உலா வந்த கிசுகிசுக்கள் என்றால், அது, சுந்தர் சி, தன்னை கேட்காமல் சந்தானத்தை தனது படத்தில் நடிக்க வைத்துவிட்டார் என்பதுதான் என பேசப்பட்டு வந்தது. ஆனால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கேங்கர்ஸ் படத்தின் மூலம் அவர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

வடிவேலு எமோஷனல்: அதேபோல் வடிவேலு அவரது நண்பரும் நகைச்சுவை நடிகருமான விவேக்கின் மறைவின் போது நேரில் சென்று துக்கம் விசாரிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு இப்போதும் உள்ளது. மேலும் இது மிகப்பெரிய கேள்வியாகவும் பலருக்கும் உள்ளது. ஆனால் அவரது மறைவு தொடர்பாக கண்ணீர் சிந்தி வீடியோ வெளியிட்டிருந்தார். வடிவேலு இது தொடர்பாக இதுவரை பேசாமல் இருந்ததால், பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள். இந்நிலையில் வடிவேலு இது தொடர்பாக முதன் முதலாக பேசி, தனது மொத்த பாரத்தையும் இறக்கி வைத்துள்ளார்.
விவேக் மறைவு: இது தொடர்பாக அவர் பேசும்போது, " விவேக்கின் இறப்பு தாங்க முடியாத வலி. அவன் இறப்புக்கு நான் போகவில்லைனு நிறைய பேர் சொன்னாங்க. ஆனால் வீட்டுக்கு எல்லாம் சென்று, விவேக்கின் மனைவி, குழந்தைகள் அனைவரிடமும் துக்கம் விசாரித்தேன். விவேக் இறப்பான்னு நான் நினைக்கவே இல்லை. அவன் இறந்த காலகட்டத்தில் நானே ரொம்பவும் மோசமாகத்தான் இருந்தேன். எங்க வீட்டுலயே ஒருததர ஒருத்தர் பாத்துட்டு பயந்துட்டு இருந்தாங்க. அதனால்தான் போகவில்லை" என பதில் அளித்து, தனது மனதில் இருந்த மொத்த பாரத்தையும் இறக்கி வைத்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த்: சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு மொத்த திரை உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்த காலகட்டம் கொரோனா கால கட்டம் என்பதால், இவரது மறைவுக்கு பல திரைப் பிரபலங்கள் நேரில் செல்லவில்லை. மேலும் விவேக் மறைவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சிலர் விவேக்கின் மறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக சிலர் கூறினார்கள். ஆனால் அரசு தரப்பில் இது தொடர்பாக முற்றிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. விவேக் குறித்து மனம் திறந்த வடிவேலு, மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து விரைவில் மனம் திறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். விவேக் மறைவு குறித்து வடிவேலு பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











