கடைசி நேரத்தில் விட்டுப்போன அபிநய் தோழி.. கொள்ளி வைக்க கூட ஆள் இல்ல.. 44 வயதில் இப்படி ஒரு மரணம்!
சென்னை: 2002 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'துள்ளுவதோ இளமை'. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் அபிநய். அந்த படத்திற்கு பின், தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்துள்ள இவர். தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்ட திரையுலகிலும் நடித்துள்ளார். கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைத்து, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. உறவுகள் யாரும் இல்லாததால், நடிகர் சங்கத்தின் சார்பில் முன் நின்று அனைத்தையும் நடிகர் விஜய் முத்து கவனித்துக்கொண்டார்.
இதுகுறித்து, Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், அபிநய உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்டதும், நடிகர் சங்கத்தினர் என்னை தொடர்பு கொண்டு, முன் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்கள். இதையடுத்து, தான் நான் அபிநய் வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டில் உறங்கியபடியே உயிரிழந்து இருக்கிறார். மருத்துவமனையில் மரணம் அடைந்து இருந்தால் அறிக்கை கிடைத்திருக்கும் அதை வைத்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால், அவர் வீட்டிலேயே இறந்ததால், உறவினர்களின் கையெழுத்து கட்டாயம் தேவைப்பட்டது. ஆனால், அவரது உறவினர்கள் யாருமே வரவில்லை.

நடிகர் விஜய் முத்து: அதன் பிறகு தான் மீடியாவில் அபிநய் உறவினர்கள் யாராவது இருந்தால், தயவு செய்து வரவேண்டும் என செய்தி வெளியான பிறகு, அபிநய் உறவினர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது, கல்லீரல் மாற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துவிட்டோம். ஆனால், அதன் பிறகும் அபிநய் குடியை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்து கொண்டு இருந்ததால் உறவினர்கள் யாரும் அவரிடம் பேசாமல் அவரை விட்டு விலகி விட்டோம் என்றார். இதைக்கேட்டு எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 44 வயதில் எதற்காக மதுவிற்கு இப்படி அடிமையானார் என்று தெரியவில்லை. தாய், தந்தை இறந்த பின் தான் இவர் இந்த குடிப்பழக்கத்திற்கு அதிகமாக அடிமையாக இருக்கிறார்.
விட்டுப்பிரிந்த தோழி: அபிநய்க்கு ஒரு பெண் தோழி இருந்துள்ளார் அவருடன் நான்கு மாதத்திற்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான், ரங்கராஜபுரத்திற்கு வாடகை வீட்டிற்கு வந்து இருக்கிறார். நேற்று அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் உடலை இங்கு வைக்க கூடாது எடுத்து சென்று விடுங்கள் என பிரச்சனை செய்தார். கடைசியில் நடிகர் சங்கத்தினர் பேசி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். கொள்ளி வைப்பதற்கு கூட யாரும் இல்லை, யார் கொள்ளிவைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்த போது, அபிநய் அம்மா வழி சொந்தத்தில் இருந்து ஒருவர் வந்து இறுதி சடங்குகளை செய்தார். இது எவ்வளவு கொடுமையான விஷயம். அழகு திறமை இருந்தும் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை என்ற வேதனை அவரை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி 44 வயதிலேயே அவரது வாழ்க்கையே முடிந்துவிட்டது. ஆனால், பாலா கடைசி வரை கூடவே இருந்து பல உதவிகளை செய்தார் என்று வேதனையுடன் நடிகர் விஜய் முத்து அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











