“நான் ரஜினி சாரின் ஸ்கூலில் படித்தவன்.. இயக்குநரின் நடிகராக இருப்பதே என் ஆசை: விவேக் ராஜ்கோபால்
இயக்குநரின் நடிகராக இருப்பதே தன் ஆசை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக் ராஜ்கோபால்.
சென்னை: சத்யராஜ் , கிஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் நாயகன் புதுமுக நடிகர்விவேக் ராஜ்கோபால் கூறியிருக்கிறார்.
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டு பெற்ற படம் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்.
இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும் மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பார்கள். விவேக் ஓர் அறிமுக நடிகராக இருந்தாலும் அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

நடிப்புப் பயிற்சி:
இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி விவேக் ராஜ்கோபால் கூறுகையில், "நான் சென்னை தான். ரஜினி சாரின் ஆஸ்ரம் ஸ்கூலில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில் போனது . சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது. கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். எனக்கும் பயிற்சி அளித்தவர் ` ஜோக்கர் ` பட நாயகன் குரு சோமசுந்தரம் .

படவாய்ப்பு:
நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன் . இந்தப் படம் `எச்சரிக்கை` இது மனிதர்கள் நடமாடும் இடம்' உருவாக இருப்பது அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன். ஏற்கனவே அவர் நான்கு பேரை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனாலும் நான் விடவில்லை. விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும் போது நானும் கூடவே இருந்தேன். அது கூட எனக்கு ஒரு பாடமாக இருந்தது. இயக்குநரின் எண்ணம் எதிர்பார்ப்பு பற்றி அறிய முடிந்தது.

நம்பிக்கை:
ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம் , மகிழ்ச்சி , தன்னம்பிக்கை எல்லாம் வந்தது .ஏனென்றால் உடன் நடிப்பவர்கள் சத்யராஜ் , கிஷோர் , வரலட்சுமி என்று ஏற்கனவே பிரபலமானவர்கள் இருக்கும் போது, இயக்குநர் நினைத்திருந்தால் நான் ஏற்ற தாமஸ் பாத்திரத்துக்கு பிரபலமான ஒரு நடிகரைக் கூட நடிக்க வைத்திருக்க முடியும். இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு எப்படியும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது.

பயம்:
இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் . சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும். அவர் பெரிய நடிகர் அனுபவசாலி . `பாகுபலி `படம் எல்லாம் வந்து அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது. அவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம் , பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகப் பேசிப்பழகி என்னை ஆச்சரியப்பட வைத்தார் .

வரலட்சுமி:
அதே போல கிஷோர் சாரும். அவரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப் படுத்தினார். அதே போல வரலட்சுமி , சினிமா பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். அது மட்டுமல்ல தாரை தப்பட்டை படத்தில் சண்டைக்காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

மறக்க முடியாத அனுபவம்:
புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல், சண்டை காட்சிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பாடல் காட்சியிலும் அதே போல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்த பின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான கண்ணியமான நடிகை . இப்படி ஒரே படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவங்கள்.

என் கனவு:
நான் ஒரு கதாநாயகன் என்கிற பெயரில் வர விரும்பவில்லை. நான் ஒரு நடிகன். நான் ஒரு இயக்குநரின் நடிகன். இப்படி அறியப்படவே ஆசை. நல்லதோ கெட்டதோ எப்படிப் பட்ட பாத்திரமும் ஏற்கத் தயார், என்னை விட என் பாத்திரம் பேசப்படட்டும். இதுவே என் விருப்பம் கனவு எல்லாமே" என்கிறார விவேக் ராஜ்கோபால்,


Click it and Unblock the Notifications











