வீட்ல ஒத்துக்கல.. ஓடி போகக்கூட பிளான் பண்ணோம்.. 15 வருட காதல் ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிப் படங்களில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் குறித்த விஷயங்களை ரகசியமாக வைத்து இருந்த இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் கீர்த்தி சுரேஷின் காதல் கதை மெல்ல மெல்ல இந்த உலகிற்கு தெரியவந்தது.
நடிகை கீர்த்தி சுரேஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தங்களது காதல் குறித்து பல சுவாரசியமான ரகசியங்களை உடைத்துள்ளார். அதாவது அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் காலம் வருவதற்கு முன் 'ஆர்குட்' சோசியல் மீடியா பிரபலமாக இருந்த காலத்திலேயே இருவரும் நட்பாக பழகி, கிட்டத்தட்ட ஒரு மாதம் சாட்டிங் செய்த பிறகு தான் இருவரும் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்களாம்.

கண்ணசைவு: தங்களின் முதல் சந்திப்பு குறித்துச் சிரித்துக்கொண்டே பேசிய கீர்த்தி சுரேஷ், அப்போது நான் எனது குடும்பத்தினருடன் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றிருந்தேன். தற்செயலாக ஆண்டனியும் அதே ஹோட்டலுக்கு வந்திருந்தார். என்னைச் சுற்றி உறவினர்கள் ஏகப்பட்ட பேர் இருந்ததால், என்னால் அவரிடம் நேராகச் சென்று பேச முடியவில்லை. அதனால், நான் அவரைப் பார்த்து மெதுவாக ஒரு கண்ணசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
காதலை சொன்னார்: அதன் பின் தான் ஆண்டனிக்கு நான் ஒரு சவால் விட்டேன், உனக்கு தைரியம் இருந்தா என்னிடம் வந்து காதலைச் சொல் என்று சொன்னேன். அந்த சாவலுக்கு பின் ஒருவழியாக அவர் 2010-ஆம் ஆண்டு என்னிடம் காதலை சொன்னார். அதன் பின் எங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் காதலிக்கும் போது, ஆண்டனி எனக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்தார். இந்த மோதிரத்தை நான் இதுவரை கழற்றியதே இல்லை, எனது பல திரைப்படங்களில் கூட அந்த மோதிரம் என் கையில் இருக்கும் என்றார்.

ஓடிப்போக பிளான்: தொடர்ந்து தனது காதல் கணவர் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், என்னைவிட என் கணவர் 7 வயது மூத்தவர். அவர் ஆரம்பத்தில் கத்தாரில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் வேலை பார்த்தார். அந்த கால கட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொண்டே இல்லை, எப்போதாவது தான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இருவரும் காதலில் உறுதியாக இருந்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் காதலை வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்களோ என்ற பயம் வந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாமா என்று திட்டம் போட்டோம். அதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட சிரிப்பாக வருகிறது. ஆனால், எங்கள் காதலை மேலும் உறுதியாக்கியது கொரோனா லாக்டவுன் தான். ஆண்டனிக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சது அவரோட அதிர்ஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்க, ஆனா உண்மையைச் சொல்லணும்னா அவரை கணவரா அடைய நான் தான் ரொம்ப கொடுத்து வச்சவள் எனத் தனது கணவர் மீதுள்ள காதலை நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் விட்டு பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications