‘ஸ்மோக்‘ வந்தா.. பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.. நம்பி நம்பி ஏமாந்து விட்டேன்.. சோனா பேட்டி!
சென்னை: 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் நடித்துவரும் நடிகை சோனா தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்து, 'ஸ்மோக்' என்ற இணையத் தொடரின் மூலம் தனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். இந்த தொடர் வெளியாக தொடர்ந்து பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும், என்னுடைய சுயசரிதை வெளியானால் பலரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதால் பலர் பயப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.
நடிகை சோனா: அதில், பேசிய சோனா, நான் சென்னையின் மிகவும் பரபரப்பான பகுதியில் வளர்ந்தேன். ஆனால் இப்போது யாரும் இல்லாத அமைதியான வாழ்க்கையை விரும்பி, பாண்டிச்சேரி அருகிலுள்ள ஆரோவில் பகுதியில் தனியாக வாழ்ந்து வருகிறேன். இந்த வீட்டில் டிவி கூட இல்லை. எல்லாவற்றையும் வெறுத்துவிட்டேன். மனிதர்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதற்கு காரணம், என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான மனிதர்கள் தான். 'கவர்ச்சி நடிகை' என்ற முத்திரையை என் மீது குத்திவிட்டார்கள். இப்போது எனக்கு 49 வயதாகிறது. இதற்கு மேல் கவர்ச்சி காட்ட விருப்பமில்லை. அதனால் எனக்கு மிகவும் பிடித்த இயக்கத் துறையில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தேன்.

'ஸ்மோக்' என் வாழ்க்கை கதை: மற்றவர்களில் கதையை எடுத்துப் படம் எடுக்க விருப்பமில்லை. அதனால், என் வாழ்க்கையில் நான் சந்தித்த அவமானம், வெற்றி, தோல்வி, கஷ்டங்கள் அனைத்தையும் படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்போது என் அம்மா, நான் உயிரோடு இருக்கும் வரை அந்த படத்தை எடுக்காதே என்று கூறினார். அதனால் அந்த யோசனையை விட்டுவிட்டேன். இப்போது அம்மா மறைந்த பிறகு அந்த படைப்பை உருவாக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு நாள் படப்பிடிப்பை முடிப்பதற்குள்ளேயே 'போதும் போதும்' என்ற நிலைக்கு சென்று விடுகிறேன்.

நம்பி ஏமாந்தேன்:'ஸ்மோக்' வெளியானால் பலரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற பயத்திலும் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதால், அந்த தொடர் வெளியாகக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் சந்தித்த கஷ்டங்களை படமாக எடுக்க நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் அமைதியாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் உண்மைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்த பிறகுதான் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன. நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் நம்பி ஏமாந்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இனிமேல் நான் அழுது கொண்டு ஏமாந்துவிட்டேன் என சொல்ல மாட்டேன். சிரித்துக்கொண்டே என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்வேன். அந்த சிரிப்பே அவர்களுக்கு மிகப்பெரிய வலியாக இருக்கும் என கண்ணீருடன் நடிகை சோனா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications