ரூ.18 லட்சம் சம்பள பாக்கி.. ராதிகா நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. நடிகை விஜி வேதனை!
சென்னை: பிரபல நடிகை சரிதாவின் தங்கையும், நடிகையுமானவர் விஜி சந்திரசேகர் 80களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் சூரி நடிப்பில் உருவான மாமன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், Galatta Pink youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
அதில், மாமன் திரைப்படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்து உள்ளது. அதில், நானும் ராஜ்கிரணும் ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடித்து இருக்கிறோம். அந்த படத்தை பார்த்து பலரும் என்னை பாராட்டி வருகின்றனர். அது உண்மையில் எனக்கு பெருமையாக தான் இருக்கிறது. பல நேரங்களில் எனக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். இதனால், சினிமாவை விட்டே போய்விடலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன். அந்த அளவிற்கு மனம் வெறுத்துவிட்டது. ஒரு சிலர் என் நடிப்பை பார்த்துவிட்டு, பெரிய நடிகைகளின் பெயரை சொல்லி அவர்களை விட நீங்கள் நன்றாக நடிப்பதாக சொல்லுவார்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட எனக்கு குறைவான சம்பளம் கொடுக்கும் போது, அது மிகுந்த மன வலியை கொடுத்தது.

நடிகை விஜி சந்திரசேகர்: சினிமாவில் நடிப்பதை விட சம்பளம் வாங்குவது தான் மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும், சில நடிகைகள் முதலில் பேமெண்ட் அதன் பிறகு தான் நடிப்பு என்று கறாராக இருப்பார்கள். நான் அப்படி செய்ய மாட்டேன், சம்பள விஷயத்தில் கறாராக இருக்க மாட்டேன். நடித்து முடித்த பிறகும் பலர் என்னிடம் பேமெண்ட் பிறகு தருகிறேன், சனிக்கிழமை தருகிறேன் என்று சொல்வார்கள், அதுபோல எத்தனையோ சனிக்கிழமை போய்விட்டது யாரும் எனக்கு சரியான சம்பளத்தை தரவே இல்லை. நான் ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத்திற்கு சந்திரகுமாரி என்கிற சீரியலில் நடித்தேன். அதற்காக எனக்கு 18 லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும். ஆனால், இதுவரைக்கும் எனக்கு அந்த சம்பளம் வரவே இல்லை. நானும் பலமுறை கேட்டு விட்டேன். இப்போது தருகிறேன், பிறகு தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சந்திரகுமாரி: சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் ராதிகா அவர்கள் லீட் ரோலில் நடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அந்த சீரியலின் நேரம் 9.30 மணியிலிருந்து மாலை ஆறரை மணிக்கு மாற்றப்பட்டது. இதனால், அந்த சீரியலில் இருந்து ராதிகா விலகி விட்டு, அவருடைய கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொன்னார்கள். முதலில் நான் மறுத்தேன். அதன் பிறகு, எனக்க நடி என்று என்னை கட்டாயப்படுத்தி நடிக்க சொன்னார்கள். நான் ராதிகாவை என்னுடைய அக்கா போல நினைப்பதால், அவர்கள் சொன்னதால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த சீரியலில் இரவும், பகலாக நடித்துக் கொடுத்தேன். ஆனால், கடைசியில் அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.

கர்மா சும்மா விடாது: அந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பிற்கு எந்த நடிகர்களும் வர முடியாது. இதுதான் கிளைமாக்ஸ் காட்சி, இதோடு சீரியல் நிறுத்தப்படுகிறது என்று சொன்னார்கள். அப்போது நான், ராதிகா என்னிடம் அப்படி எதுவும் சொல்லவில்லை, நிச்சயமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும், வாங்க என அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தேன். ஆனால், என்னிடம் சொல்லாமலே அந்த சீரியலை திடீரென முடித்துவிட்டு இன்று தான் கடைசி நாள் ஷூட்டிங் என்றார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். அந்த சீரியல் முடிந்து 6 வருடத்திற்கு மேலாகிறது, கிட்டத்தட்ட 18 லட்சம் ரூபாய் எனக்கு சம்பளம் தரவேண்டும். இதுவரை ராதிகா தரவில்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பார்கள், என் நெற்றியில் ஏமாளி என்று எழுதி இருக்கிறது போல, அதன் பலரும் என்னை ஏமாற்றுகிறார்கள். ஆனால், கர்மா ஒன்று இருக்கிறது, அது யாரையும் சும்மாவிடாது, அதற்கு அனைவரும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நாம் கொடுக்க, கொடுக்க தான் நம்மிடம் பணம் வரும் என நடிகை விஜி சந்திரசேகர் அந்த பேட்டியில் வேதனையுடன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











