Exclusive: 'விரைவில் அடங்க மறு 2'... இயக்குனர் கார்த்திக் தங்கவேல் பிரத்யேகப் பேட்டி!
அடங்க மறு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இருப்பதாக அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் கூறியுள்ளார்.
சென்னை : தன்னை பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே அடங்க மறு கதையை உருவாக்கியதாக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் கூறியுள்ளார்.
ஜெயம் ரவி போலீசாக நடித்து கடந்த 21ம் தேதி வெளியான படம் அடங்க மறு. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல். தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக போராடி இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்.
அடங்க மறு படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து,

மக்களின் அங்கீகாரம்
"இந்த படம் வெற்றி அடையும் என நான் நம்பிக்கையாக இருந்தேன். இந்த படத்தின் கதை மீதும், திரைக்கதை மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஜெயம் ரவியின் நடிப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணம். மக்கள் நிச்சயம் இந்த படத்தை அங்கீகரிப்பார்கள் என நம்பினேன். அதேபோல் அங்கீகரித்துள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொழில்நுட்ப ஆய்வு
இந்த படத்துக்காக தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து நிறைய ஆய்வு செய்தேன். நிறைய விஷயங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தன. இருப்பினும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதை செய்தோம்.

உண்மை சம்பவம்
இந்த படத்தின் மையக்கரு என்னை பாதித்த சம்பவம் தான். நாம் செய்திகளில் தினந்தோறும் பார்க்கக்கூடிய சம்பவம் தான். குறிப்பாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார கொலை சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கினேன்.

அடங்க மறு 2
அடங்க மறு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் யோசனை இருக்கிறது. இதைவிட நல்ல கதைக்கரு இருக்கிறது. அதில் ஒன்றை ஸ்கிரிப்ட் செய்து படமாக எடுக்க யோசித்திருக்கிறேன். விரைவில் அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

வெவ்வேறு வகை படங்கள்
எனக்கு வெவ்வேறு வகையான படங்களை இயக்குவது தான் பிடிக்கும். ஒரே மாதிரியான படங்களை எடுப்பது எனக்கு பிடிக்காது. எனவே இப்போது சீரியஸான ஒரு படத்தை கொடுத்த மாதிரி, அடுத்து ஜாலியான ஒரு படத்தை கொடுக்க நினைக்கிறேன். நான் எழுத உட்காரும் போதுதான் அது தெரியும்.

சினிமாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும்
சினிமாவுக்கு சின்சியராக இருந்தால் போதும். அது நமக்கு நிச்சயம் நல்ல வாழ்க்கையை கொடுக்கும். இதில் எத்தனை வருடப்போராட்டம் என்பது முக்கியமல்ல. எனக்கு அது தான் நடந்துள்ளது. படம் வெற்றி பெற்றுள்ளதால், எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











