ஓ இவங்க தானா அவங்க...அஜித், விஜய் ஒரே மாதிரி தான் என்று சொல்லும் ஐஸ்வர்யா யார் தெரியுமா?
சென்னை: இளம் இயக்குனர்களிடம் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அவர்கள் சாதிப்பதற்கு நாம் தளம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று லெண்டி பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா யாருடைய மருமகள் என்பது தான் சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது.
Recommended Video

தயாரிப்பு துறையிலும் பெண்கள் முன்னுரிமை அடைய வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் ஜஸ்வர்யா கூறினார்.அஜித், விஜய் இரண்டு பேருமே சமமானவர்கள். கடவுள் ஆசீர்வாதம் இருந்து, வாய்ப்பு அமையுமானால் கண்டிப்பாக நடிகர் விஜய்யை வைத்து படம் தயாரிப்பேன் என்று ஐஸ்வர்யா தெரிவித்தார்.
பிரபல தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்தின் மருமகளும், இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியுமான ஐஸ்வர்யா நமது பிலிம்பீட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டி பற்றி இங்கு காணலாம்.

முழு நிறைவாக செய்ய வேண்டும்
கேள்வி: தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடமிருந்து மருமகளாக நீங்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: எனது மாமனார் ஏ.எம்.ரத்தினம் அவர்களிடமிருந்து பன்முகத்தன்மையையும், எந்த வேலையாக இருந்தாலும் முழுநிறைவாக செய்யவேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். நடிகர் அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் பாதியில் இருந்து, பட தயாரிப்பு வேலையை கவனித்து வந்தேன். எப்படி படம் எடுக்க முடியும் என்பதை கற்றுக் கொண்டேன்.

ஏன் நாம் கஷ்டப்படணும்
கேள்வி: தயாரிப்பாளர் அவதாரம் குறித்து...
பதில்: ஆரம்பம் படத்தில் கற்றுக்கொண்டதை, என்னை அறிந்தால் படத்தில் தயாரிப்பாளர் பெயர் போடும் பொழுது எனது பெயரும் இடம் பெற்றது. பின்னர் நடிகர் அஜித் நடித்த வேதாளம், நடிகர் விஜய் சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களிலும் எனது பெயர் வந்தது. படங்கள் தயாரிப்பது என்பது காசு போடற விஷயம் கிடையாது. அதையும் தாண்டி போஸ்ட் புரோடக்ஷன், புரோமோஷன், படம் ரிலீஸ், கலெக்ஷன், போட்ட பணத்தை எடுப்போமா என்கிற மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது ஏன் நாம் கஷ்டப்படணும் என்று தோன்றும். அந்த கஷ்டத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் படம் வெற்றியடையும்பொழுது நமக்கு கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம். நடிகர்கள், இயக்குனர் ஆகியோர் மக்களிடம் சென்றடைந்து விடுகின்றனர். ஆனால் தயாரிப்பாளர் நிலைமை தான் பல நேரங்களில் கேள்விக்குறியாகி விடுகிறது .

பெண்களுக்கு முன்னுரிமை
கேள்வி: லெண்டி பிலிம்ஸ் என்று ஏன் தனியாக தயாரிப்பு நிறுவனம் உருவாகியது?
பதில்: எனது மாமனார் பெரிய பெரிய படங்களை தயாரிப்பவர். நானும் இந்த துறையில் தனியாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தான். குறிப்பாக தயாரிப்பாளர் துறையில் பெண் தயாரிப்பாளர் அவ்வளவு பேர் இல்லை. ஆண் தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் துறையில் பெண்களும் முன்னுரிமை பெற வேண்டும் என்பது தான் எனது ஆசையும் கூட என்றார்.

அழகான பூந்தோட்டம்
கேள்வி: உங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு லெண்டி பிலிம்ஸ் என்று பெயர் வைக்க காரணம்?
பதில்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த பெயரை நான் வைக்கவில்லை. சுரேஷ் சந்திரா சார் ( அஜித் பி.ஆர்.ஓ ) தான் என்னிடம் வந்து, லெண்டி ஸ்டூடியோஸ் என்று பெயர் உள்ளது. அதை நீ பயன்படுத்தி கொள்கிறாயா என்று கேட்டார். அப்பொழுது தான் அவரிடம் அந்த பெயரின் விளக்கத்தை கேட்டேன். அப்போது அவர் கூறுகையில், லெண்டி என்பது சீரடியில் உள்ள சாய்பாவின் தோட்டமாகும். அந்த தோட்டம் எப்படி உருவானது என்றால், உபயோகமற்ற நிலத்தை பூந்தோட்டமாக மாற்றியவர் சாய்பாபா என்றார். அதை மனதில் வைத்து தான் பல பேரின் உழைப்பு, கிரியேட்டிவிட்டி போன்றவற்றால் ஒரு அழகான பூந்தோட்டமாக திரைப்படம் உருவாகிறது. எனவே தான் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு லெண்டி பிலிம்ஸ் என்று வைத்தேன் என்றார். எனக்கு இஷ்ட தெய்வமும் சாய்பாபா தான் என்றார்.

சுசீந்திரன் சொன்ன ரகசியம்
கேள்வி: உங்கள் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள இயக்குனர்கள் குறித்து கூற விரும்புவது....
பதில்: இயக்குனர்கள் சுசீந்திரன், கௌதம்மேனன், சிவா போன்றவர்களிடம் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஒவ்வொருவருத்தரும் தனக்கென்று ஒரு ஸ்டைலில் பணிபுரிகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் வந்தவுடன் கதையை யோசிச்சு, கிரியேட்டிவிட்டியுடன் இந்த சீன் எடுக்க வேண்டும் என்று கூறும்பொழுது பிரமிப்பாக இருக்கும். மூன்று பேரும் மிகவும் திறமைசாலிகள். இயக்குனர் சுசீந்திரன் அவர்களிடம் படத்தை எத்தனை நாட்களில் முடிப்பீர்கள் என்று கேட்பேன். அவர் 35 நாட்களில் படத்தை முடித்து விடுவேன் என்று கூறுவார். 35 நாட்களில் படம் எப்படி முடியும் என்று சொல்கிறீர்கள் என்பேன். ஒரு நாளைக்கு 6 நிமிடம் படம் எடுத்தால் 35 நாட்களில் தாராளமாக படத்தை முடிக்க முடியும் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார். ஒரு படத்திற்கு தொடர்ச்சியாக 35 நாட்கள் ஷூட்டிங் செய்தோம். கேமராமேன் வேல்ராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்காரமாட்டார். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேட்டுக் கொண்டிருப்பார் என்று கூறினார்.

நடிப்பு வராது ஆனா பாடத்தெரியும்
கேள்வி: இயக்குனர் ஜோதி கிருஷ்ணா எப்பொழுது தமிழில் படம் இயக்குவார்?
பதில்: தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.அதை அவர் செய்கிறார்.நான் தமிழில் செய்து கொண்டிருக்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு நடிப்பதற்கு விருப்பம் உண்டா?
பதில்: நடிப்பு எனக்கு வராது. எனக்கு பாடத்தெரியும். தெலுங்கில் ஆக்ஸிஜன் என்ற படத்தில் ஒரு பாட்டு பாடி இருக்கிறேன். மியூசிக் ஆல்பம் பாடல்களை செய்து கொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து தயாரிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன் என்றார். அது மட்டும் இல்லாமல் நமக்காக ஒரு பாடலையும் பாடி காட்டினார் ஐஸ்வர்யா .பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று வீடியோவில் காணலாம் .
விஜய் படத்தின் தயாரிப்பு
கேள்வி: நடிகர் அஜித் வைத்து படம் தயாரித்த நீங்கள், விஜய்யை வைத்து படம் தயாரிப்பீர்களா?
பதில்: தளபதி விஜய், அஜித் இரண்டு பேரும் சமமானவர்கள். ஒரே மாதிரி தான் அவர்களது சினிமா கனவுகளும் மற்றும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் . கடவுள் மனது வைத்து, வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிகர் விஜய்யை வைத்து படம் எடுப்பேன். எதுவும் நம் கையில் இல்லை. கடவுள் கையில் தான் உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், இளம் இயக்குனர்களிடம் நிறைய கதையை கேட்டிருக்கிறேன். அவர்களிடம் கிரியேட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. அவர்கள் சாதிப்பதற்கு நாம் தளம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆண்டவன் ஆசிர்வாதம் எனக்கு இருந்து, பணவரவும் சரியாக இருந்தால் இளம் இயக்குனர்களை கொண்டு புதுமையான படங்களை தயாரிப்பேன் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் ஐஸ்வர்யா .இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று https://youtu.be/LkhcLXoGjec இந்த லிங்கை கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications











