அமீர் மதம் மாறனும்னு சொன்னாரா? தாலி ரகசியத்தை உடைத்த பாவனி ரெட்டி!
சென்னை: நடிகை பாவனிக்கும் நடன இயக்குநர் அமீருக்கும் கடந்த மாதம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பிரியங்கா, அமீரின் சகோதரியாக இருந்து நாத்தனார் முடிச்சு போட்டார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் கணவர் வசி மற்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இவர்கள் இருவரும் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து பல விஷயத்தை பகிர்ந்துள்ளனர்.
பதில்: பாவனியை நீங்க எங்கே எப்போது பாத்தீங்க?
கேள்வி: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது, எனக்கு எல்லாருக்கும் வந்தது போல வரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் தான் எனக்கு அழைப்பு வந்தது. எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பழக்கம் இல்லை. அப்போது தான் நான் என் நண்பர்களிடம், வீட்டில் என்ன நடக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அப்போது, அவர்கள் அனைவரும், பிக் பாஸ் வீட்டிற்குள் போனா, பாவனி கிட்ட மட்டும் பேசக்கூடாது என்று சொன்னார்கள். அப்போது தான், யார் அந்த பாவனி என்று, இன்ஸ்டாகிராமில் தேடிப்பார்த்தேன். அப்போது, இவர்களின் ஒரு வீடியோவை பார்தேன். பார்த்ததுமே எனக்கு பிடித்து இருந்தது, இவர்களிடமா.. பேசக்கூடாது என்று சொன்னீங்க இவங்க கிட்டத்தான் பேசுவேன் என்று முடிவு எடுத்தேன்.

நான் பிக் பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பே, பாவனிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பிவிட்டு பாலோ செய்துவிட்டுத்தான் போனேன். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு அந்த வாய்ப்பை நான் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், அதில் எனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் அனைத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டேன். இருந்த போதும், காலையில் இருந்து இரவு படுக்கும் வரை, என் மனதிற்கு பிடித்த பெண்ணை பார்த்துக்கொண்டே இருந்ததால், என் மனதிற்குள் காதல் வந்துவிட்டது. அந்த காதலை நான் ஏன் மறைக்க வேண்டும் என்று, பாவனியிடம் பல முறை காதலை சொல்லி இருக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாவனி இது கண்டென்ட் தானே என்று கேட்டார். இல்ல, உண்மையாகத்தான் லவ் பண்றேன், நல்லா யோசித்துவிட்டு சொல்லு என்று சொல்லிவிட்டேன்.
காதலை ஏற்றுக்கொண்டாள்: அதைத்தொடர்ந்து மீண்டும் இருவரும் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதுமட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இதனால், பல இடத்திற்கு சேர்ந்தே சென்றதால், எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில், பாவனி என்னிடம் காதலை கூறிவிட்டாள், அதன் பின் இருவரும், ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். தற்போது, எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாவனியை நான் காதலிப்பதாக சொன்ன போது அவள், மிகவும் யோசித்தாள், காதலித்துவிட்டு பின் பிரேக் அப் செய்துவிட்டு போகிற ஆள் இல்லனா, என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னாள், என்னுடைய முடிவும் அதுவாகத்தான் இருந்தது. மேலும், எனக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக இருவரும் ஓடிக்கொண்டே இருந்தோம் என்றார்.

தப்பா பேசினாங்க: இதைத்தொடர்ந்து பேசிய பாவனி ரெட்டி, நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது கூட, எல்லாரும் தப்பா பேசினார்கள், அந்த விஷயத்திற்காகத்தான் இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால், எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி என்னுடைய அம்மாவிற்கு நல்ல புரிதல் இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்த காலத்தில் அவரை பற்றி நானும், என்னை பற்றி அவரும் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களை பார்க்கிறவர்கள் எப்போ கல்யாணம் என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கேட்கிறவர்கள் யாரும், எங்கள் வீட்டு பில்லை கட்டப்போவது இல்லை. எங்கள் திருமணத்திற்கு கூட யாரிடமும் நாங்கள் எந்த உதவியையும், பணத்தையும் கேட்கவில்லை. எல்லாமே நாங்கள் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து தான் செய்து கொண்டாம். எங்க அம்மா ஏதாவது பணம் வேண்டுமா என்று கேட்டார்கள். வேண்டாம், கல்யாணத்திற்கு வந்தா மட்டும் போதும் என்று சொன்னோம்.
அதே போல, எங்களுடைய திருமணத்தில் அமீர் எந்த விதமான மத சடங்கையும் செய்யவில்லை. ஆனால், நான் இந்து பெண் என்பதால், சில சடங்குகளை செய்தேன். அப்போது தான் என் மனம் திருப்தியாக இருக்கும் என்பதற்காக செய்தேன். அதே போல, எனக்கு மஞ்சள் கயிறு தான் வேண்டும் என்று கேட்டேன். உனக்கு அது பிடிக்கும் என்றால் அப்படியே செய்து விடுகிறேன் என்று சொன்னார். அமீர், மதம் மாற வேண்டும் என்று சொல்லவில்லை, இரண்டு பேரும் அவர் அவர் மதத்தை பின் பற்றித்தான் இருக்கக்போகிறோம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு மஞ்சள் கயிறு பிடிக்கும் என்பதால் கேட்டேன். அமீரும் நோ சொல்லவில்லை என்று பாவனி ரெட்டி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த பாவனி சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், சீரியல் பக்கம் தனது கவனத்தை திரும்பினார். தெலுங்கில் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த பாவனி ரெட்டி, தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால், அந்த சீரியல் பாவனிக்கு ஒரு அடையாளத்தை தரவில்லை. இதையடுத்து, விஜய் டிவியில் சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்தார். அந்த சீரியல் மூலம் பாவனி ரெட்டி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென பாவனி அந்த சீரியலில் இருந்த விலகி திருமணம் செய்து கொண்டார்.
பாவனி ரெட்டி தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 3ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு காதலர் தினத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பாவனி ரெட்டி ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். ஆனால், திருமணமான நான்கு மாதத்திலேயே நடிகர் பிரதீப் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மனவேதனையில் இருந்த பாவனி ரெட்டி, அதில் இருந்து மீண்டு, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் தான் அமீர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











