எனக்கு பாலிவுட் என்ற சொல்லே பிடிக்காது.. கோபத்தின் உச்சத்திற்கே சென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்
சென்னை: இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் உலக அளவில் இந்தியாவின் பெருமைமிகு அடையாளம். இசைக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிய அவரால் மொத்த இந்தியாவே பெருமை அடைந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமான் தற்போது அதிகம் தமிழ் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறார் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பாலிவுட் என்ற சொல்லே பிடிக்காது எனக் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றவர். இவரது இசை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்தது. சினிமா துறையில் இப்போது இருப்பதை காட்டிலும் முன்பெல்லாம், மிகவும் மோசமான அணுகுமுறை இருந்தது. இதனாலேயே பாலிவுட் சினிமா மீது ரகுமானுக்கு வெறுப்பு ஏற்பட்டது என்று கூட கூறலாம். ஹிந்தி சினிமாவில் இன்னும் பங்காற்றி வந்தாலும் தமிழில் இசையை வளர்த்தெடுப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.

நேற்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் " 'தமிழ்' உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன. இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

ARR இம்மர்ஸிவ்: இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமை சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது. ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்" என பதிவிட்டிருந்தார்.

பேட்டி: இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அளித்துள்ள பேட்டியில் பாலிவுட் என்ற வார்த்தை தனக்குப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் என்ன கற்றுக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு அவர் பேசியுள்ளார். அதாவது, " முதலில் எனக்கு பாலிவுட் என்ற வார்த்தையே பிடிக்காது. ஏனென்றால் அது இந்திய படங்களைக் குறிப்பிடும் சொல்லாக இல்லை. இந்திய திரைப்படங்கள் என்றால் அது, தமிழ் படங்கள், மலையாள படங்கள், தெலுங்கு படங்கள், கன்னட படங்கள், ஹிந்தி படங்கள் போன்றவைதான்.
கற்றுக் கொள்ள: பாலிவுட் என்ற வார்த்தைக்கு இந்தி சினிமா என்றுதான் அர்த்தம். அதாவது வட இந்திய விஷயங்களைக் கொண்டது. இந்திய படங்களில் கலாச்சாரம், தத்துவம், கவிதை மற்றும் ராகங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. இந்திய படங்களில் இருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன" என பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











