Exclusive Interview: சிவாஜியை போல செவாலியர் விருது பெற்ற தோட்டா தரணி.. பிரமாண்ட செட்களின் ரகசியம்!
சென்னை: பிரமாண்டம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வந்துவிட்டது என்று கலை இயக்குநர் தோட்டா தரணி கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட் சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர், திரைப்படங்களின் பிரமாண்டம் குறித்தும், கலை உருவாக்கம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "நான் எந்த காண்ட்ராக்ட் எடுத்தும் காசு வாங்கியது கிடையாது. எவ்வளவு சீப்பா பண்ண முடியுமோ, அவ்வளவு சீப்பாக பண்ணிக் கொடுத்திருக்கேன். புரொடியூசருக்கு எவ்வளவு சேவை பண்றியோ, அவ்வளவு தூரத்துக்கு அவர் பெட்டர்" என்று கூறினார். மேலும் ஏவி.எம். மற்றும் கே.டி. குஞ்சுமோன் போன்ற தயாரிப்பாளர்கள் தரமான செட்களுக்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர் ஷங்கர் பட்ஜெட் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்றும், ஒரு கோடியே 50 லட்சத்திற்குள் செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் எனவும் தோட்டா தரணி தெரிவித்தார். ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் நடித்த பாடல் காட்சிக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செட் தான் அதிகபட்சமாக மூன்றரை கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அதுவே அவர் அதிக செலவு செய்த செட் என்றும் கூறினார்.
சென்னையில் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் இல்லாத காலத்தில், 'அஞ்சலி' படத்துக்காக உருவாக்கப்பட்ட அப்பார்ட்மெண்ட் செட், பில்டர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது என்று தோட்டா தரணி குறிப்பிட்டார். அந்த செட் உருவாக்கப்பட்டபோது, அமெரிக்காவில் இருந்த பிரபலம் அதை பார்த்துவிட்டு அது செட் என்று நம்பவில்லை என்றும் அதுபோன்ற த்ரில் தான் எங்களுக்கு எனர்ஜியை கொடுக்கும் என்றார்.
ஷங்கரின் 'சிவாஜி' படத்திற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டபோது, அதை பிரிக்கும்போது ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான வலியை தவிர்க்கவே, அந்த இடத்தை விட்டு சென்று விடுவதாக தோட்டா தரணி கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்த அவர் விரும்பவில்லை என்றும், அது தனது வேலைக்குத் தேவையில்லாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு பேப்பர், பென்சில் தான் எனக்குத் தேவை ஏஐ அல்ல என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.
ஒருமுறை மணிரத்னம் 'நாயகன்' படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டை நிராகரித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். ராஜமௌலியின் படங்களில் கிராஃபிக்ஸ் அதிகமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிவதாகவும் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் ஜீவா தான் ஷங்கரை முதன்முதலில் சந்திக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.
தோட்டா தரணி தொடர்ந்து கூறுகையில் "நான் எந்த ஆளுக்கும் பயப்பட மாட்டேன். என்னுடைய ஒர்க் மட்டும் கரெக்டா வரணும். நீ பெரிய காலர் போட்டுட்டு வர்றியோ, சின்ன காலர் போட்டுட்டு வர்றியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பண்ற செட் லிவிங்கா இருக்கணும்" என்றார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் அரசு செவாலியர் விருது கொடுத்து கவுரவித்ததை போல சமீபத்தில், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் செவாலியர் விருது அறிவித்து கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு இயல்பாகவும் எளிமையாகவும், நகைச்சுவை உணர்வுடனும் தோட்டா தரணி பேசுகிறார் என்பதை இந்த வீடியோவில் பார்த்து மகிழவும்.


Click it and Unblock the Notifications











