அமீர் - பாவனி திருமணம் செல்லுமா? சட்டத்தில் இடம் உண்டா? கொளுத்திப் போட்ட பிரபலம்!
சென்னை: பிரபலமான காதல் ஜோடியான அமீர் மற்றும் பாவனி ரெட்டியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து பலர் இந்த ஜோடி மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால், எல்லாவற்றையும் சர்ச்சையாக்கும் பயில்வான் ரங்கநாதன் இந்த திருமணம் செல்லுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
மாடல் அழகியான பாவனி ரெட்டி 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லாகின்' என்ற படம் மூலமாக நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார். பின் அதே ஆண்டிலேயே தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள், ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த பாவனி ரெட்டிக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாததால், சீரியல் பக்கம் தனது கவனத்தை திரும்பினார். தெலுங்கில் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த இவர், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல்களில் நடித்தார். அந்த சீரியல்களுக்கு பிறகு விஜய் டிவியில் சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்தார். அந்த தொடர் பாவனி ரெட்டிக்கு ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.

பாவனி ரெட்டி: இந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது தான் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை காதலித்தார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து பல இடத்திற்கு டேட்டிங் சென்ற நிலையில், இந்த விஷயம் பாவனி ரெட்டியின் பெற்றோரின் காதுக்கு செல்ல, பின் இருவரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சின்னத்தம்பி சீரியலில் இருந்து விலகிய பாவனி ரெட்டி ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். ஆனால், திருமணமான நான்கு மாதத்திலேயே நடிகர் பிரதீப் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 5: அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் மிகுந்த மன வேதனையில் இருந்த பாவனி ரெட்டி, அதில் இருந்து மீண்டு, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதையில் தனது வாழ்க்கையில் நடந்த அந்த கசப்பான விஷயம் குறித்து பேசிய பாவனி ரெட்டி, நான் பிரதீப்பை உயிருக்கு உயிராக காதலித்தேன், புதியதாக வீடு கட்டி ஆசை ஆசையாக வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், கடைசியில் என்னை இப்படி பாதியில் விட்டு விட்டு போவான் என்று நான் நினைக்கவே இல்லை. அவன், இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை என கண்ணீருடன் பேசி இருந்தார். பாவனியின் பேச்சு பலரை கண்கலங்க வைத்தது.

முத்தம் கொடுத்தார்: அதன் பிறகு தான் பிக் பாஸ் சீசன் 5ல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார் டான்ஸ் மாஸ்டர் அமீர். அவர் உள்ளே வந்ததுமே அவருக்கு பாவனி மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது. அதை பல முறை அமீர், பாவனி இடமே சொல்லிவிட்டார். இந்த நேரத்தில் தான் ராஜூ 'ட்ரூத் ஆர் டேர்' விளையாட்டில் அபிநய் வட்டியிடம் நீங்கள், பாவனியை காதலிக்கிறீர்களா... என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில், அமீர், பாவனியை காதலிப்பதாக சொல்ல, பாவனியோ நீ என்னைவிட சின்னவன் உனக்கும் எனக்கும் செட்டாகாது என்று சொன்னார். பின் பிக் பாஸ் வீட்டிலேயே பாவனிக்கு முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் ராஜீவ் டைட்டிலை வென்றார். பிரியங்காவிற்கு இரண்டாவது இடமும் அமீர் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
3 ஆண்டு காதல்: அதைத் தொடர்ந்து அமீர் மற்றும் பாவனி இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியிலே பல முறை அமீர், பாவனியிடம் காதலை சொன்ன போதும், அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார். இதையடுத்து, பிபி ஜோடியில் வெற்றி பெற்ற போது, பாவனி ரெட்டி, அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒரே வீட்டில் 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், அனைவரும் எப்போது கல்யாணம் என கேட்டு வந்தனர். இதையடுத்து, பிப்ரவரி மாதம் பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்து இருந்தனர். அதில், இந்த மூன்று வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை, நமக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட 3 நிமிடம் போல தான் இருக்கும். என கவிதை நடையில் திருமண தேதியை அறிவித்து இருந்தார்.

இந்து முறைப்படி திருமணம்: இதையடுத்து, ஹல்தி கொண்டாட்டத்துடன் இவர்களின் திருமணம் களைகட்டிய நிலையில், பிரியங்கா முதல் ஆளாக வந்து நலங்கு வைத்து ஹல்தியில் கலந்து கொண்டார். இதையடுத்து, இன்று காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. தாலியை கையில் எடுத்து அனைவருக்கும் காட்டிய அமீர், அதை பாவனி கழுத்தில் கட்டி பாவனிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தார். இந்த திருமணத்தில் விஜே பிரியங்கா முன்னின்று நடத்தி வைத்து, நாத்தனார் முடிச்சு போட்டார். தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இணையவாசிகள் பலரும், இன்று போல என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமணம் செல்லுமா: இவர்களின் திருமணம் குறித்து யூடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன், பாவனி ரெட்டி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், அமீர் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராக மாறிவிட்டார். இதனால், இவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தது, இதனால் இவர்கள் இருவரும் கலந்து பேசி, யாரும் மதம் மாற வேண்டாம் என்று முடிவு செய்து பேசி திருமண தேதியை அறிவித்தனர். தற்போது, அமீர் இந்து முறைப்படி தான் பாவனி ரெட்டி கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார். அமீர் இஸ்லாமியர், பாவனி ரெட்டி கிறிஸ்துவர் அப்படி இருக்கும் போது சட்டப்படி இந்த திருமணம் செல்லுமா.. இந்த திருமணத்தை எங்கு சென்று ரிஜிஸ்டர் செய்வார்கள் என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இவரின் பேச்சை கேட்டு கடுப்பான இணையவாசிகள், இரண்டு மனம் சேர்ந்துவிட்ட பின் மதம் என்ன... சட்டம் என்ன என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











