பலரை நம்பி ஏமாந்துட்டேன்.. 6 மாதம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. அன்ஷிதா கண்ணீர் பேட்டி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை அன்ஷிதா. பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது, யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை மனம் விட்டு பேசி உள்ளார்.
அம்மா 20 வயதிலேயே அப்பாவை விட்டு பிரிந்து வந்துவிட்டார். எங்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களிடம் இருந்ததால், வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். என்னை வளர்த்தது பாட்டி தான். எப்பொழுதும் அம்மா இல்லையே என நினைத்து அழுது ஏங்கிக் கொண்டே இருப்பேன். பள்ளிக்கூடத்திற்கு மற்ற பெற்றோர்கள் வருவதை பார்க்கும் பொழுது எனக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லையே என நினைப்பேன். அந்த வயதில், எனக்காக தான் அம்மா வெளியூருக்கு சென்று வேலை பார்க்கிறார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.

நடிகை அன்ஷிதா: இந்த நேரத்தில் தான் எனக்கு பிள்ளை வாதம் வந்து ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. உடம்பு முழுக்க சின்ன சின்ன பருக்கள் போல வந்து, அது உடல் முழுக்க பரவி விட்டது. இதனால், மொட்டை அடிக்கும் அளவிற்கு சென்று, உடல் எடை குறைந்து படுத்த படுக்கையாகி விட்டேன். ஆறு மாதம் நடக்க முடியாமல் படுக்கையிலேயே படாத கஷ்டப்பட்டேன். அப்படிப்பட்ட நிலைமையில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்து, என்னை மருத்துவமனையில் சேர்த்து என்னை கவனித்து கொண்டது என்னுடைய பாட்டி தான்.
அவசியம் இல்லை: எல்லாத்தில் இருந்து மீண்டு வந்து அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தான் சினிமாவில் நடிக்க வந்தேன். ஆனால், எப்பொழுதும் கூட பலரை நம்பி ஏமாந்து இருக்கிறேன். பல விஷயங்கள் என்னை சுற்றியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நான் எப்படிப்பட்டவள் என்பதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். என்னை பற்றி தவறாக பேசுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் பேசட்டும், என் அம்மாவிற்கும், என் குடும்பத்திற்கும் அன்ஷிதா எப்படிப்பட்டவள் என்று நன்றாகவே தெரியும்.
பலரை நம்பி ஏமாந்துவிட்டேன்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பலர் என்னை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அந்த பெயரை மாற்றுவதற்காகத்தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சென்றேன். நான் நினைத்தபடி பிக் பாஸ்க்கு பின் அனைவரும் என்னை வேறு விதமாக பார்க்கிறார்கள். இதை பலர் என்னிடம் நேரடியாகவே சொன்னார்கள். உன்னை எனக்கு பிடிக்காது, ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி பின் உன்னை பிடித்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கை பல விஷயத்தையும், போலியான பலரையும் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இருந்தாலும், என்னை என்னால், மாற்றிக்கொள்ளவே முடியவில்லை. ஒருவரை எனக்கு பிடித்துவிட்டால், அவர்களுக்கு அன்பை அள்ளி அள்ளி கொடுப்பேன். ஆனால், அவர்கள் அந்த அன்பை எனக்கு கொடுக்க மாட்டார்கள். இப்பொழுதும் நான் பலரை நம்பி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று அன்ஷிதா அந்த பேட்டியில் மனம் உருகி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











