Ilaiyaraaja: ரசிகர்களின் அன்பால் திகைத்துப்போனேன்.. கடவுளுக்கு நன்றி.. இளையராஜா நெகிழ்ச்சி!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நாளில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடி போனதாக தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் இசை முகவரி, தமிழ் இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரத்தை கூட்டிய இசை சாம்ராஜ்யம் தான் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தில் தொடங்கிய இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்று வரை பட்டிதொட்டி எங்கும் பரவி கிடக்கிறது. இளையராஜாவின் இசை 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக்கலந்து, அவர்களின் வாழ்க்கையை செதுக்கி கொண்டே பயணிக்கிறது.

இசைஞானி இளையராஜா: வடக்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த நேரத்தில், தனி ஒரு கலைஞனாக இருந்து தமிழ் இசையை செழிக்க செய்ததிலும், இசையை மக்களுக்கு நெருக்கமாக்கியவர் தான் இளையராஜா. தமிழ் திரைப்படங்களில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ரசிகர்களை கட்டி போடும் வித்தை தெரிந்தவர் இசைஞானி இளையராஜா. கமலஹாசன், ரஜினிகாந்த், மோகன், ராமராஜன் போன்றவர்களின் திரைவாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றத்தில் இளையராஜாவிற்கு முக்கிய பங்கு உண்டு.
82வது பிறந்த நாள்: இசையின் ராஜாவாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இளையாராஜா, 1943-ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசைய்யா. தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு, 82 வயதிலும் ஈடு இணையற்ற இசையின் ராஜாவாக திகழ்கிறார். இவர் ஜூன் 3ம் தேதி பிறந்தாலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்றைய தினம் என்பதால், அவரின் மீதுள்ள மரியாதையால் தன்னுடைய பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா. இன்று அவரின் 82வது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள், திரைப்பிரங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வார்த்தையே இல்லை: இந்நாளில் செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களும், என் ரசிகர்களுக்கும், என்னை சந்திக்க வேண்டும் என்பதற்கான கஷ்டப்பட்டு இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்ல இத்தனை பேர் வந்து இருப்பதை பார்த்து வாய் அடைத்துவிட்டது. இவர்களுக்கு என் மேல் எவ்வளவு அன்பு என நினைக்கும் போது, வார்த்தை வரவில்லை. இத்தனை அன்பை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால், அவர்களின் சிரமத்தை எல்லாம் பார்க்காமல், இவ்வளவு தூரம் கடந்து வந்து, இரவெல்லாம் விழித்து இருந்து, பேருந்தில் ஏறி, ரயிலில் ஏறி எவ்வளவு சிரமத்தை தாண்டி வந்து இருப்பார்கள். என்னை பார்ப்பது என்பது ஒரு சாதாரணமான விஷயம். ஆனால், அதற்காக எங்கிருந்தோ சிரமப்பட்டு, என்னை பார்க்க போகிறோம் என்ற ஆசையில் ஒரு வாரம் தூங்காதவர்களும் இருக்கிறார்கள், அவர்களை எனக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு எல்லாம் எப்படி நான் வாழ்த்து சொல்வேன், வாழ்த்து சொல்வதற்கு எல்லாம் என்னிடம் வார்த்தையே இல்லை, என இளையராஜா நெகிழ்ந்து பேசினார்.


Click it and Unblock the Notifications











