இ.கோ.மு.சிங்கத்துக்கு 10 வயசு..கவுபாய் தேசத்துல இருந்து வந்த அந்த விஷயம்..நினைவுகூறும் சிம்புதேவன்
சென்னை: கவுபாய் படமான 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' வெளியாகி பத்து வருடம் ஆனதை அடுத்து அதுபற்றி நினைவு கூர்ந்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.
சிம்புதேவன் இயக்கத்தில் அதிரடியாக உருவான கவுபாய் படம், 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்'.
இதில் ராகவா லாரன்ஸ், சந்தியா, பத்மப்ரியா, லட்சுமி ராய், நாசர், இளவரசு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

பத்து வருடம்
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் பிரமாண்டமாகத் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். அழகப்பன் ஒளிப்பதிவு செய்திருந்தார். பின்னணி இசை சபேஷ் முரளி. கடந்த 10 வருடத்துக்கு முன், மே 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது இந்தப் படம். அதற்குள் பத்து வருடத்தை வேகமாக கடந்து நிற்கிறது.

பிரமாண்ட செட்
ஆவேசமாகப் பாயும் குதிரைகளும் புழுதி பறக்கும் தரைகளும் துப்பாக்கி சத்தங்களும் ஸ்டைலான அவர்களின் காஸ்ட்யூமும்தான் ஹாலிவுட் கவுபாய் படங்களின் சிறப்பு. அந்த தன்மைக் கொஞ்சமும் மாறாமல் தமிழுக்கு ஏற்ப வந்த கவுபாய் படம், முரட்டு சிங்கம். பிரமாண்ட செட்களும் லொகேஷன்களும் அவ்வளவு நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்களின் உழைப்பும் அபாராமாகப் பேசப்பட்டது அப்போது.

கங்காவுக்குப் பிறகு
கர்ணன் இயக்கத்தில், ஜெய்சங்கர் நடித்து 1972 ஆம் ஆண்டு வெளியான கவுபாய், படம் 'கங்கா'. அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், ராஜ்கோகிலா உட்பட பலர் நடித்திருந்தனர். மறைந்த இயக்குனர் மகேந்திரன் அந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி இருந்தார். அதற்குப் பிறகு தமிழில் உருவான கவுபாய் படம், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்தான்.

பாராட்டு கடிதங்கள்
இந்தப் படம் வெளியாகி 10 வருடம் ஆனதை, தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். படம் வெளியான காலகட்டத்தில் மறைந்த இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோர் படத்தை பாராட்டி எழுதி இருந்த கடிதங்களையும் அவர் அதில் இணைத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் அடுத்த பாகம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இத்தாலி ரசிகர்
இந்நிலையில் இயக்குனர் சிம்புதேவனிடம் இதுபற்றி கேட்டபோது, நினைவில் மூழ்கினார். ‘இப்போதும் இந்த படத்துக்கு வரவேற்பு இருக்கு. குழந்தைகள் முதல் பெரியவங்க வரை யுடியூப்ல படத்தைப் பார்த்துட்டு பேசறாங்க. எழுதறாங்க. பொதுவா கவுபாய் படங்களுக்கான ஆர்ஜினே இத்தாலிதான். அதுதான் கவுபாய் தேசம். அங்க இருக்கிற ஒரு ரசிகர் சிறப்பான கவுபாய் படம் இதுன்னு பேசியிருந்தார். அதை பெரிய அங்கீகாரமா பார்க்கிறேன்.
Recommended Video

செர்ஜியா லியோன்
இந்த மாதிரியான கவுபாய் படங்களுக்கு குரு, இத்தாலி டைரக்டர் செர்ஜியா லியோன் (Sergio Leone). அவங்க ஊர்ல இருந்து கிடைச்ச பாராட்டு எனக்கு முக்கியமானதுன்னு நினைக்கிறேன். படத்தை பிரமாண்டமா தயாரிச்ச கல்பாத்தி அகோரம் சாருக்கு நன்றி சொல்லணும். ஒரு முறை, ராகவா லாரன்ஸை பார்க்கும்போது, இந்த படத்தோட இரண்டாம் பாகம் கூட பண்ணலாம்னு சொன்னார். எல்லாம் கூடி வந்தால் மகிழ்ச்சி' என்கிறார் சிம்புதேவன்.


Click it and Unblock the Notifications