விஜய்சேதுபதியை யாரும் கெடுத்துடக்கூடாது.. லாபம் பிரஸ் மீட்டில் பரபரப்பாக பேசிய பிரபல தயாரிப்பாளர்!
சென்னை: மண் வாசனை பட தயாரிப்பாளரும் சூரசம்ஹாரம் படத்தின் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் லாபம் பிரஸ் மீட்டில் நடிகர் விஜய்சேதுபதியை யாரும் கெடுத்துடக் கூடாது என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
வரும் செப்டம்பர் 9ம் தேதி மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள லாபம் திரைப்படம் திரைக்கு வருகிறது.
இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் சென்னையில் லாபம் பிரஸ் மீட் நடைபெற்றது.

லாபம் பிரஸ் மீட்
லாபம் பிரஸ் மீட் நிகழ்ச்சி மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு பலரும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாகவே மாறியது. இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை மற்றும் லாபம் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் லாபம் படத்தின் ரிலீசுக்கு முன்பே மறைந்து விட்டது ஒட்டுமொத்த சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சித்ரா லட்சுமணன் புகழாரம்
இயக்குநர் எஸ்பி ஜனநாதனை ஒரு முறை பேட்டி எடுத்த பிறகு தான் அவரை பற்றி நன்கு புரிந்து கொண்டேன். அதன் பின்னர் தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது என நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் பற்றி புகழ்ந்து பேசினார்.

தஞ்சாவூர் கோயில் பற்றிய படம்
இயக்குநர் எஸ்பி ஜனநாதன் தஞ்சாவூர் கோயிலை எப்படி கட்டினார்கள் என்கிற படத்தை இயக்க வேண்டும் எனும் கனவில் இருந்தார் என்றும், அது தொடர்பான ஏகப்பட்ட தரவுகளையும் அவர் சேகரித்து வைத்திருந்தார். அப்படியொரு படம் உருவானால் அது தமிழ் சினிமாவுக்கே மிகப்பெரிய பெருமை எனக் கூறினார்.

ஜெய்சங்கருடன் ஒப்பீடு
பலரும் நடிகர் விஜய்சேதுபதியை ஜெய்சங்கருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஒரு மாசத்துல 4 படம் ஜெய்சங்கர் மாதிரின்னு சொல்றாங்க.. ஜெய்சங்கர் அதையும் தாண்டி நல்ல மனுஷன் விஜய்சேதுபதியும் ஜெய்சங்கரை போல நல்ல மனுஷன் என்று தான் நான் அவரை பார்க்கிறேன் என்றார்.

கெடுத்துடாதீங்க
ஆனால், அந்த மனுஷன யாரும் கெடுத்துடக் கூடாது என பேசி பலரையும் சிரிக்க வைத்தார் சித்ரா லட்சுமணன். சினிமாவில் பல பேர் நல்ல மனுஷங்களா உள்ள வருவாங்க, ஆனால், நாம தான் அவங்கள கெடுத்துடுறோம் என்றும் பேசினார்.
அவருடைய நடிப்பு
பல இளம் இயக்குநர்களும் புதிய புதிய கதைகளுடன் விஜய்சேதுபதியை அணுக காரணமே அவருடைய நடிப்பு தான். இப்படியொரு நடிகன் கிடைக்க மாட்றானே என ஏங்கித் தான் விஜய்சேதுபதியை தேடி இப்படி பலரும் வருகின்றனர் என்றும் பேசி கைதட்டல்களை அள்ளினார்.

உஷாரா இருக்கணும்
ஆனால், இப்போதான் விஜய்சேதுபதி உஷாரா இருக்கணும். தேவையில்லாத சர்ச்சைகளில் எல்லாம் மாட்டிவிடக் கூடாது என தனக்கே உரிய பாணியில் சித்ரா லட்சுமணன் பிரஸ் மீட்டில் பேசி லாபம் திரைப்படம் நல்ல லாபத்தை கொடுக்கணும் என பேசி முடித்தார். மேலும், பல பிரபலங்களும் பிரஸ் மீட்டில் இயக்குநர் ஜனநாதன் பற்றியும் விஜய்சேதுபதி பற்றியும் பேசிய வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











