பிறந்ததுமே தந்தை மரணம்.. வீட்டில் 5 பெண்கள்.. படாத கஷ்டங்களே இல்லை..சாதித்த மதுமிதாவின் கதை!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர் நடிப்பில் வெளியான அத்தனை நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என சந்தானம் அழைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். நடிகை மதுமிதாவிற்கு 2016-2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது அறவிக்கப்பட்டுள்ளது. காஸ்மோரா மற்றும் வரிசி ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்தற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுமிதா பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி: ஒரே நேரத்தில் ரெண்டு விருது கிடைத்து இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது?
பதில்: கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்பது போல ஒரே நேரத்தில் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு விருது கிடைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கனவாக இருக்கக்கூடிய விஷயம். எனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. லேட்டா கிடைத்தாலும் லேட்டஸ்ட்டாக இந்த விருதை எனக்கு கிடைத்திருக்கிறது. எல்லை இல்லா மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்.

கேள்வி: உங்கள் மனசுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?
பதில்: எத்தனை குழந்தை பெற்றாலும் அத்தனை குழந்தைகள் மீதும் ஒரு அம்மாவிற்கு பாசம் இருக்கும். அதுபோல எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அந்த கதாபாத்திரத்தில் ஈடுபாடுடன் தான் நடிப்பேன். ஆனால், மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு கதாபாத்திரம் என்றால், அது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்த ஜாங்கிரி கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரம் வெற்றியடைந்ததன் மூலமாகத்தான் நான் இங்கு இந்த இடத்தில் இருக்கிறேன்.
அப்பா மரணம்: இதைத்தொடர்ந்து தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அவர், நான் ஒரு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். வீட்டில் ஐந்தாவது பெண் நான் தான். அம்மா ஐந்து பெண்களையும் மிகவும் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். ஆண் வாசனையே இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். அப்படி இருந்தும், நான் சினிமாவில் நடிக்க ஆசைபட்ட போது எந்தவிதமான தடையும் விதிக்காமல் அம்மா என்னை நடிக்க அனுப்பினார்கள். சினிமாவில் மனோரம்மா ஆச்சி போல வரவேண்டும் என்பது தான் என் கனவு. ஆனால், இப்போது சினிமாவில் சின்ன குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறன். பெண் நகைச்சுவை காமெடி நடிகைகள் ஒரு சிலர் தான் இருக்கிறார்கள் அவர்களை மனதில் வைத்து, எந்த கதாசிரியர்களும் நகைச்சுவையை எழுதுவதே இல்லை. தற்போது வெளியாகும் படங்களில் நகைச்சுவையே இல்லாமல் ஆகிவிட்டது. இது எந்த அளவிற்கு சினிமாவிற்கு நல்லது என்று எனக்கு தெரியவில்லை என்றார்.
வியப்பாக இருக்கு: ஒரு நடிகைக்கு திருமணமாகிவிட்டால் அவர் நடிக்க மாட்டார் என்று அவர்களாவே நினைத்துக்கொள்கிறார்கள். அதை உடைக்க வேண்டும் என்பதற்காக நான் நடித்தேன். என் மகனை அழைத்துக்கொண்டே படப்பிடிப்புக்கு செல்வேன், சிலர் அதற்கு ஒகே சொல்வார்கள், சிலர் அதை ஏற்றுகொள்ள மாட்டார்கள், இருந்தாலும் அவை அனைத்தையும் எப்படியோ கடந்து விட்டேன். இப்போதும் அந்த விஷயத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது என மதுமிதா மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











