சிவகார்த்திகேயனுக்கு காமெடி..விஜய்சேதுபதிக்கு செண்டிமெண்ட்.. அலசி ஆராயும் இயக்குநர் பொன்ராம்!
சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, புகழ், நடிகை அனுகீர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிஎஸ்பி.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என காமெடி கலந்த படத்தை இயக்கிய பொன்ராம், ஆக்ஷன் படமாக டிஎஸ்பி படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை காணலாம்.

என் மீது அக்கறை கொண்டவர்
கேள்வி: உங்கள் சினிமாப்பயணம் குறித்து நீங்கள் கூற விரும்புவது...
பதில்: 2007ம் ஆண்டு திருத்தம் என்ற படத்தை இயக்கினேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதை மறப்பதற்கு கஷ்டப்பட்டேன். அதனால் பல பேர் என்னை ஒதுக்கினார்கள். கதை கூட கேட்க மறுத்தனர். அப்பொழுது தான் நான் தெரிந்து கொண்டேன். நாம் கற்றுக்கொண்டதை தவறாக கற்றுக் கொண்டுள்ளோம். மற்றவர்களை குறை கூற கூடாது என்று தோன்றியது. மேலும் நடிகர் சூரியின் கோட்டை அழியுங்கள்; முதலில் இருந்து சாப்பிடுகிறேன் என்ற புரோட்டா காமெடி தான் எனக்கு நினைவுக்கு வந்தது. திரும்ப எனது நண்பர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றினேன். ஜெயிப்பதற்கு முயற்சி செய்தேன் என்று கூட கூறலாம். நாம் வெற்றி வெற வேண்டுமென்றால் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும். 5 முதல் 6 வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை தான் வாழ்ந்தேன். ராஜேஷ் உடன் மூன்று படங்கள் பணிபுரிந்ததற்கு பிறகு நீங்கள் தனியே படம் பண்ணுங்கள் என்று கூறி எனக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுத்தார். நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர் எனது நண்பர் ராஜேஷ் என்றார்.

வெற்றி எப்பொழுது?
கேள்வி: சினிமாத்துறையில் எதை செய்யக்கூடாது?
பதில்: சினிமாத்துறையில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வி கிடைத்தவுடன் தளர்ந்து விடக்கூடாது. கீழே விழுந்து விடக்கூடாது. அவ்வாறு விழுந்தால் கூட உடனே எழுந்து விட வேண்டும். அவ்வாறு எழும்போது தான் நமக்கு வெற்றி கிடைக்கிறது என்றார்.

நவரசமாக நடிப்பவர் சிவகார்த்திகேயன்
கேள்வி: நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி குறித்து...
பதில்: நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இருவரையும் வைத்து படம் இயக்கியது நான் செய்த அதிர்ஷ்டம். இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், அன்பாக இருப்பர். நடிகர் சிவகார்த்திகேயனை பொறுத்தவரை நவரசம் மாதிரி நடிப்பார். டயலாக் கொடுத்து விட்டால், அதை மேம்படுத்தி அருமையாக நடிக்கக்கூடியவர். காமெடி கலந்து காதல் காட்சிகளில் அருமையாக நடிப்பவர். விஜய்சேதுபதியை பொறுத்தவரை கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு, மிக அழுத்தமான கதாபாத்திரமாகவே மாறி நடித்துக் கொடுப்பவர். விஜய்சேதுபதிக்கு காமெடி நன்றாக வராது. ஆனால் அழுகை காட்சிகளில் நடிப்பதில் சிவகார்த்திகேயனை விட சிறந்தவர் என்றார்.

பிரம்மாண்டமான படம்
கேள்வி: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் குறித்து...
பதில்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நான் கூறிய கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயனும், சூரியும் அதை சிறப்பாக நடித்துக் கொடுத்து பிரம்மாண்டமான படமாக மாற்றினர். இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மூன்று படங்களில் பணிபுரிந்து விட்டேன். தற்போது இயக்குநர் என்று அந்தஸ்து கிடைத்துள்ளது என்றார்.

அரசியலில் தனி இடம்
கேள்வி: நடிகர் உதயநிதி வைத்து படம் இயக்குவீர்களா?
பதில்: நடிகர் உதயநிதியுடன் இணைந்து ஓ.கே..ஓ.கே. படத்தில் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றினேன். அவ்வப்போது அவரிடம் சில கதைகளை கூறுவேன். ஆனால் எந்த கதையையும் அவரிடம் நான் முழுமையாக கூறவில்லை. உதயநிதி சினிமாத்துறையை விட்டு விலகுகிறேன் என்று கூறி வருகிறார். அவர் விலகுவதற்கு முன்னால் அவரை வைத்து நான் ஒரு படம் இயக்க வேண்டும். அவருக்கு அரசியலில் தனி இடம் ஒன்று இருக்கிறது. அவரது அரசியலும், அதை சார்ந்த இமேஜ் பாதிக்காத வண்ணம் கதையை தயார் செய்து வருகிறேன் என்றார்.
நான் செல்லப்பிள்ளை
கேள்வி: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: எனக்கும், ராஜேஷ்க்கும் குருநாதர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவருடன் 6 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். அனைத்து திரைப்படங்களை பார்ப்பது, கதையை விவாதிப்பது மட்டுமின்றி பொதுவிஷயங்களையும் பேசுவோம். நான் அவருடைய செல்லப்பிள்ளை. இந்த வயதிலும் கடுமையாக உழைக்கக்கூடியவர். அவருக்கு திருப்தியில்லையென்றால் ரீஷூட் செய்யவும் தயங்க மாட்டார். அவருடைய படமும், எனது படமும் ஒரே நாளில் வெளியாவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/PesKrXGa7ps இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications











