தனுஷ் படத்தில் மட்டும் தான் அது இல்லை.. மத்த எல்லாருமே அசிங்கப்படுத்தினாங்க.. வித்யுலேகா பகீர் பேட்டி!
சென்னை: நடிகர் மோகன் ராமின் மகளான வித்யுலேகா ராமன் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் திருமணம் செய்துக் கொண்ட அவர் அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் பிசியாக இருப்பதாகவும் வெளிநாட்டுக்குச் சென்று குடியேறிவிட்டதாகவும் சிலர் வதந்திகளை பரப்பிய நிலையில் தான் தனக்கு நடிக்க வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விட்டதாகவும் உருவ கேலி தன்னை ரொம்பவே பாதித்தது என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
வெர்டிக்ட் எனும் படத்தில் வித்யுலேகா ராமன் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அமெரிக்க வாழ் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் தான் ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படத்தில் மட்டுமே தன்னை பாடி ஷேமிங் செய்யவில்லை என்றும் மற்ற எல்லா படங்களிலும் இயக்குநர்கள் உருவ கேலி காட்சிகளில் தான் நடிக்க வைத்தனர் என்றும் ஒரே போடாக போட்டுள்ளார்.
நடிகை வித்யுலேகா ராமன்: தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக பொன்னியின் செல்வன் உள்பட பல படங்களில் நடித்தவர் தான் மோகன் ராமன். அவரது மகளான வித்யுலேகா ராமன் கடந்த 2012ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் நடித்த நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த அவர், பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வீரம், காக்கிச்சட்டை, மாஸ், இனிமே இப்படித்தான், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, புலி, வேதாளம் என பிசியாக நடித்து வந்தவர் அதன் பின்னர் தெலுங்கில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.

என்னை ஒதுக்கிட்டாங்க: தெலுங்கில் பிசியான காமெடி நடிகையாக வித்யுலேகா மாறிய நிலையில், தமிழில் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. மேலும், 2021ம் ஆண்டு சஞ்சய் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்றும் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் என்றும் வதந்திகளை கிளப்பி தமிழிலும் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் கிடைக்கவிடாமல் சிலர் செய்துவிட்டனர் என பகிரங்கமாக கூறியுள்ளார்.
தனுஷ் படத்தில் மட்டும் தான் இல்லை: பொதுவாகவே எல்லா படங்களிலும் தனது உருவத்தை வைத்து உருவகேலி செய்யும் காமெடி காட்சிகளை தான் எடுத்தனர். தனுஷ் இயக்கி நடித்த ப. பாண்டி படத்தில் மட்டும் தான் அப்படி எந்தவொரு சீனோ அல்லது வசனமோ இல்லாமல் தனுஷ் எடுத்தார். மற்ற அனைவரும் பாடி ஷேமிங் தான் பண்ணார்கள். ஆரம்பத்தில் அப்படி நடிப்பது பிடிக்கவில்லை என்றாலும், இயக்குநரிடம் போய் சண்டை போட முடியாது. அவங்க சீனை மாத்த மாட்டாங்க, அதற்கு பதில் ஆளையே மாத்திடுவாங்க, நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் நடித்து வந்தேன். தற்போது நல்ல கதாபாத்திரங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. மீண்டும் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











