அம்பிகா, ராதாவிற்கு கிப்டா கொடுத்த அரசு நிலம்.. அப்படிப்பட்டவரா எம்.ஜி.ஆர்? உண்மையில் நடந்தது என்ன?
சென்னை: எம்.ஜி.ஆர் நடிகை ராதா, அம்பிகாவுக்கும் போரூரில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுத்தார் என்று பலவிதமான செய்திகள் பரவி வருகின்றன.
ஏறத்தாழ 1100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை தனது படத்தில் நடிக்காத, ராதிகா அம்பிகாவிற்கு எம்ஜிஆர் எப்படி கொடுத்தார். உண்மையில் என்ன நடந்தது என்பதை சித்ரா லட்சுமணன் வெளிப்படையான ஒரு பேட்டியில் கூறியது பற்றி, செய்தியாளர் தேனி கண்ணன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
அதில், கேரளாவிலிருந்து வந்த சரசம்மா, தன் மகள் அம்பிகாவை 1979 ஆம் ஆண்டு 'சக்களத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அம்பிகாவின் தனித்துவமான அழகு மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர். இதைப் பார்த்த அவர்களின் தாய், இளைய மகள் ராதாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அப்போது தான், பாரதிராஜா 'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்காக நடிகைகளை தேடிக்கொண்டு இருந்தார். இதை தெரிந்து கொண்டு, ராதாவின் அம்மா அவரை அணுகினார். அதன் பின் மேக்கப் டெஸ்ட், புகைப்பட தேர்வு பல செய்யப்பட்டு பின் அந்த படத்தில் நடிக்க தேர்வானார் ராதா.

நடிகை ராதா: பின் அலைகள் ஓய்வதில்லை படம் 1981 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ராதா நடித்த மேரி கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. அதன் பின் தமிழ் சினிமாவில் பல படத்தில் அக்கா,தங்கையின் ஆதிக்கம் தான் இருந்தது. கிராமத்து கதை, மார்டன் உடை என எதுவாக இருந்தாலும், அந்த கதாபாத்திரங்களுக்கு ராதா வெகுவாகப் பொருந்திப் போனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து அக்காவையே ஒரு கட்டத்தில் முந்திவிட்டார் ராதா.
வீண் பழி: எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அம்பிகா, ராதா மீது ஒரு பாசம் இருந்தது. இதனால், அரசியல் விழா நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பு உருவானது. இதற்கு காரணம் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூட இருந்து இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர். மீது களங்கம் சுமத்தும் வகையில், அவர் அரசு நிலத்தை நடிகை ராதா-அம்பிகாவுக்கு வாரி வழங்கினார் என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், இது முற்றிலும் பொய் என்று சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ARS Garden ஸ்டுடியோ அமைந்துள்ள நிலம் அரசு நிலமே கிடையாது. இது மல்லிகா என்ற தனிநபர் சொத்து. 1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த ஸ்டூடியோவின் திறந்து வைத்தார் என்பது தான் உண்மை. ஆனால், அரசு நிலத்தை நடிகைக்கு கொடுத்தார் என்பது சுத்த பொய்.
சட்டசபையில் நடந்த விவாதம்: அந்த காலகத்தில் கலைஞர், எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து வந்தார். அப்படி இருக்கும்போது, அவர் அரசு நிலத்தை முறைகேடாக கொடுத்திருந்தால், சட்டசபையில் நிச்சயம் அதை கேள்வி எழுப்பியிருப்பார். சட்டசபையில் ஒருமுறை, எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40,000 ரூபாய் பெற்று ஏமாற்றியது பற்றி கலைஞர் எழுப்பினார். அந்த கேள்விக்கு எம்.ஜி.ஆர். உடனடியாக பதில் அளித்து, உதவியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டேன். பாதிக்கப்பட்டவருக்கு பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
உண்மை இல்லை: ஒரு சாதாரண விஷயத்திற்கே கலைஞர், சட்டசபையில் கேள்வி கேட்ட போது, நடிகைகளுக்கு அரசு நிலத்தை வழங்கி இருந்தால் சும்மா இருந்து இருப்பாரா? இதுபற்றி எதுவுமே தெரியாத பல யூடியூப் சேனல்கள் ARS Garden ஸ்டுடியோ நிலத்தை ராதா-அம்பிகாவுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்ததாக தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். அந்த இடத்தின் நில வில்லங்கப் பத்திரங்களின்படி, அந்த நிலம், ராதாவின் அசல் பெயரான உதயச்சந்திரிகா பெயரில் உள்ளது. தற்போது அதன் மதிப்பு தோராயமாக ₹100 கோடி தான். ஆனால் , ₹1000 கோடி என்று கதை கட்டி விடுகிறார்கள் என்று அந்த பேட்டியில் கண்ணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











