படம் எடுக்க தெரியாத இயக்குனரா நான்.. நம்ப வச்சு ஏமாத்துறாங்க.. கொந்தளித்த சேரன்!
சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட சேரன். கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக சேரன் பாண்டியன், நாட்டாமை என பல படத்தில் பணியாற்றி இருக்கிறார். பின் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இவர், பாரதிகண்ணம்மா என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி,ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல பிளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். Little Talks என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சேரன் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
அதில், நீங்கள் ஏன் இப்போது படங்களை இயக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேரன், பலர் நான் தான் படம் எடுக்காமல் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் படம் எடுக்க வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் விருப்பப்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் சினிமா எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. பலர் இவர் மூத்த இயக்குனர், இவர் நமக்கு ஏற்றார் போல இருப்பாரா.. நாம் நினைத்ததை செய்யக்கூடிய இயக்குனராக இவர் இருப்பாரா என்றெல்லாம் பார்க்கிறார்கள். அது என்னிடம் சரிப்பட்டு வராது. அதுமட்டுமல்லாமல் சேரன் வெற்றியை கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இப்போதைக்கு பீக்கில் இருக்கும் ஒருவரை வைத்து படத்தை எடுத்து விடலாம் என நினைக்கிறார்கள். இந்த காரணங்களால் தான் எனக்கு பட வாய்ப்பு இல்லை.

வேதனையாக இருக்கு: அதுமட்டுமில்லாமல் ஒருவரிடம் கதை சொல்லி அவரும் அந்த கதைக்கு ஓகே சொல்லி, ஒரு வருடமாக அவர் பின்னால், அலைந்த பின் வேண்டாம் என்று சொல்லும்போது மனது மிகவும் வலிக்கிறது. இதற்காக நான் இரண்டு ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் வீணாக போய்விடுகிறது. ஒரு இயக்குனரின் வலியை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சரியானதாக இருக்கும். அதை விட்டு ஓராண்டு அலைய வைத்துவிட்டு, பின் ஒத்து வராது என்று சொல்வதற்கு, முன்பே இந்த கதை எனக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லிவிடலாம். நான் பல வெற்றிகளை, தோல்விகளை பார்த்தவன் இது எனக்கு பெரிய வலியாக இல்லை.
நம்ப வச்சு ஏமாத்துறாங்க: ஆனால், இன்றைய காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பு வராதா? என பல இயக்குநர்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது போன்ற ஒரு நிலை வரக்கூடாது. நான் படம் எடுக்க தெரியாதா இயக்குனரா? பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறேன், நான்கு தேசிய விருதை வாங்கி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது எனக்கு ஏன் இந்த நிலைமை. எந்த இடத்தில் நான் தவறு செய்தேன். ஏன், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நம்பிக்கை கொடுத்துவிட்டு பின் வாங்குகிறார்கள் என்று ஆதங்கப்பட்டு பேசினார் சேரன். இந்த சூழ்நிலையில் இருந்து நிச்சயம் கடந்து வந்து, நல்ல ஒரு படத்தை கொடுப்பேன் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது என சேரன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்,


Click it and Unblock the Notifications











