செத்து சுண்ணாம்பாகி படம் பண்றோம்.. கையில் ஃபோன வெச்சிக்கிட்டு கொல்லாதீங்க.. இயக்குநர் பேச்சு!
சென்னை: நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷிவதா நடித்திருக்கும் திரைப்படம் கயிலன். இத்திரைப்படம் அடுத்த ஜூலை மாதம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பேசிய இயக்குநர் கௌரவ் பொதுமக்கள் படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்றார்.
தீரா காதல் , கருடன் என வணிக ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகை ஷிவதா நடிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'கயிலன்'. இப்படத்தில் ரம்யாபாண்டியன் முக்கிய ரோலில் நடிக்க, அமீன் ஒளிப்பதிவு பணிகளையும், கார்த்திக் ஹர்ஷா இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் இப்படத்தை பி.டி.கே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி.டி. அரசகுமார் தயாரித்துள்ளார்.

கயிலன்: இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய இயக்குனர் கௌரவ், இன்றைய காலகட்டத்தில் படம் எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருக்கிறது. கதை எழுதுவதற்கே போராட வேண்டும். அதோடு, மட்டுமல்லாமல் கதையின் ஹீரோவை பிடிப்பதற்கு ஒரு போராட்டம். அந்த படத்தை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு போராட்டம், அதையும் மீறி படம் வெளியான பிறகு, கையில் தொலைபேசியை வைத்திருக்கும் அனைவருமே படத்திற்கு மார்க் போட ஆரம்பித்து விட்டார்கள், எங்களுடைய சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் படத்தை விமர்சனம் செய்யும் போதும், அதற்கு மதிப்பு மதிப்பெண் கொடுக்கும் போது நாங்கள் அதை வரவேற்கிறோம்.
மக்கள் விமர்சனம் செய்யக்கூடாது: ஆனால், இன்றைய காலகட்டத்தில் படம் பார்க்கும் வரும் ரசிகர்கள், தியேட்டரில் பாப்கான் விற்பனை செய்பவர் என அனைவரும் கையில் ஃபோனை வைத்துக்கொண்டு மார்க் போடுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்கு ஏற்ற போல படத்திற்கு மார்க் கொடுத்துக்கொண்டிருந்தால் நாங்கள் யாருக்குத்தான் படம் எடுப்பது. படத்தை மக்கள் விமர்சனம் செய்யக்கூடாது, இந்த பிரச்சனைக்காக தான் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் கடைசியில் சாதகமான தீர்ப்பு வரவில்லை. தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்பதற்காக நாம் சோர்ந்து போய்விடக்கூடாது தொடர்ந்து அதற்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் என்றாவது ஒரு நாள் நாம் நிச்சயம் ஜெயிப்போம்.
இயக்குநர் பேச்சு: இப்படி, பல போராட்டத்திற்கு மத்தியில் தான் கயிலன் திரைப்படத்தின் இயக்குநர் அஜித் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார். இன்றைய காலத்தில் பெரிய பட்ஜெட் படம், சின்ன பட்ஜெட் படம் என்பதை மக்களும், பத்திரிக்கையாளர்களும் தான் முடிவு செய்கிறார்கள். எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில், கன்டென்ட் இருந்தால், அந்த படத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். அதற்கு உதாரணமாக டி.என்.ஏ, 'மார்கன்' படத்தை சொல்லாம். ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்கும் இயக்குநர்களை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள், அந்த படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று இயக்குனர் கௌரவ் அந்த விழாவில் பேசினார்.


Click it and Unblock the Notifications











