Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கதைப் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கிறது தமிழ் சினிமா! - கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி
டல்லாஸ்(யு.எஸ்) : டெக்னிகலாக முன்னேறியுள்ள தமிழ் சினிமா, கதைப்பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கிறது என்றார் இயக்குநர் - நடிகர் கே பாக்யராஜ்.
அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாதமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இயக்குனர் பாக்யராஜை நமது செய்தியாளர் சந்தித்தார்.
அந்தப் பேட்டியிலிருந்து...
கேள்வி: மீண்டும் ஒரு முறை அமெரிக்கத் தமிழர்களை, இந்த பட்டிமன்றத்தின் மூலம் சந்தித்திருக்கிறீர்கள். இங்குள்ள தமிழர்களின் வாழ்வியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
பாக்யராஜ் : நான் இங்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் தமிழர்களின் எண்ணிக்கையும் அமெரிக்காவில் பல மடங்கு ஆகிவிட்டது. எந்த ஊருக்கு சென்றாலும், தமிழர்களை எங்கும் பார்க்க முடிகிறது. சென்னையில் இருக்கும் அனைத்து உணவகங்களும் இங்கே இருக்கின்றன. தமிழ் நாட்டின் ஒரு பகுதியா என்றே நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளுடன் பேசும் போதுதான் அமெரிக்கா என்ற வித்தியாசம் தெரிகிறது.
வித்தியாசம்
கேள்வி: குழந்தைகளிடம் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
பாக்யராஜ்: நம்மவர்கள் அதிக சிரத்தையெடுத்து நன்றாகத் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள். குழந்தைகளும் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். நம்மை விட்டு நகர்ந்ததும், அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் ஆங்கிலம், நாம் வெளி நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்.
டெக்னிக்கலாக..
கேள்வி: தமிழ் சினிமாவில் கோலோச்சிய இயக்குனர் நீங்கள். உங்கள் திரைக்கதை உலக அளவில் பேசப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவின் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?
பாக்யராஜ்: டெக்னிக்கலாக நாம் நிறையவே முன்னேறி இருக்கிறோம். நம்மவர்கள்தான் வடக்கிலே இந்தியிலும் காமிரா, எடிட்டிங் என அனைத்து துறையிலும் முன்ணணி டெக்னிஷியன்களாக இருக்கின்றனர். அவ்தார் போலவே கோச்சடையானும் நம்ம கலைஞர்களால் உருவாக்கப்படுவது, நமது தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிய சான்று.
கதைப் பஞ்சம்
ஒன் இந்தியா: டெக்னிக்கல் தவிர மற்ற துறைகளில் முன்னேறவில்லை என்கிறீர்களா?
பாக்யராஜ் : தமிழ் சினிமா பெரிய கதைப் பஞ்சத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. தற்போது எழுத்தாளர்கள் யாரும் சினிமாவில் இல்லை. எங்கள் காலத்தில் தான் இயக்குனர்களே கதை, திரைக்கதை, வசனம் என எழுத்தாளர்களாகவும் உருவெடுத்தோம். அதே பாணியில் இப்போது எல்லா டைரக்டர்களும் எழுத்தாளார்களாக வருகிறார்கள். ஆனால் தக்க அனுபவம் இல்லை என்பதால், குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாகவே கதையோட்டம் இருக்கிறது. அதைத் தாண்டி வெளியே வந்தால்தான் நிறைய கதைகள் கிடைக்கும்.
புதியவர்கள் எப்படி...
ஒன் இந்தியா: அனுபவம் மிக்க இயக்குனரான நீங்கள், புதியவர்களுக்கு வழி காட்டலாமே!
பாக்யராஜ்: இப்போதெல்லாம் குறைந்த வயதிலேயே இயக்குனர் ஆகிவிடுகிறார்கள். நல்லது தான். ஆனால் அந்த வயதுக்கேற்ற அனுபவம் மட்டுமே இருப்பதால், இளைஞர்கள் சார்ந்த கதைக்குள்ளேயே முடங்கி போய்விடுகிறார்கள். எல்லா தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். மக்களின் அனுபவத்திலிருந்து தான் நல்ல கதைகள் கிடைக்கும். நிறைய படிக்க வேண்டும். முந்தய கால கட்ட சினிமாக்களை பார்த்தாலே இவர்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
ஆக்ரி ராஸ்தா...
கேள்வி: நீங்களே வடக்கே மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கியவர்தானே!
பாக்யராஜ் : ஆமாம். ஆக்ரி ரஸ்தா படத்தை சொல்கிறீர்கள். அமிதாப் பச்சனுடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம்.
ஒன் இந்தியா: ஆக்ரி ரஸ்தா க்ளைமாக்ஸ்க்கும் தமிழில் ஒரு கைதியின் டைரி க்ளைமாக்ஸ்க்கும் ஏன் சார் வித்தியாசம் வைத்தீர்கள்.
பாக்யராஜ்: ஆக்ரி ரஸ்தா க்ளைமாக்ஸ்தான் தமிழிலும் முதலில் இருந்தது. எங்கள் இயக்குனர் குருநாதர் பாரதிராஜா விருப்பத்திற்கேற்ப அதை பின்னர் மாற்றிக்கொண்டோம்.
ரஜினி - கமலுடன்
ஒன் இந்தியா: ரஜினி, கமல், அமிதாப் என பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி இருக்கிறீர்கள். அவர்களுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா?
பாக்யராஜ் : பதினாறு வயதினிலே மறு வெளியீடு பார்த்தபோது, அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்றே தோன்றுகிறது. கிடைத்தால் நிச்சயம் ரஜினி, கமலுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறேன்.
எல்லாம் என் பாணிதானே...
ஒன் இந்தியா: இப்போது வரும் படங்களைக் குறித்து உங்கள் கருத்து என்ன?
பாக்யராஜ்: நான் எடுத்த படங்கள் எல்லாமே மிகவும் இலகுவான கதைக்களத்தில், காமெடி கலந்துதான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஒரு முக்கிய மெசேஜ் இருக்கும். தற்போதைய படங்கள் எல்லாம் எனது பாணியில் தானே வருகிறது.
இன்று போய் நாளை வா..
ஒன் இந்தியா : உண்மைதான் சார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் கிட்டத்தட்ட அப்படியே உங்க படத்தை போலவே இருந்தது, உங்க பாணியில்தான் இன்றைக்கும் படங்கள் வருகிறது என்றால் நீங்களே களத்தில் இறங்கலாமே...
பாக்யராஜ்: ஏற்கனவே எனது இன்று போய் நாளை வா படத்தை மீண்டும் இயக்க இருந்தேன். இடையில் நடந்த்து தான் உங்களுத் தெரியுமே (கண்ணா லட்டு திண்ண ஆசையா பிரச்சனையை குறிப்பிடுகிறார்) . தமிழகம் திரும்பியதும் எனது அடுத்த படத்தை தொடங்க இருக்கிறேன். புத்தம் புதிய கதையுடன் எனது மகன் சாந்தனுவை வைத்து அதை இயக்கப் போகிறேன். மற்ற கலைஞர்கள் குறித்து அப்போது அறிவிக்கிறேன்.
தீபாவளி வாழ்த்து
ஒன் இந்தியா: உங்கள் புதிய படம் மிகப் பெரிய வெற்றியடைய ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் சார்பில் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரிஜினல் பாக்யராஜ் பாணியில் படங்களை காண ஆவலாக இருக்கிறோம்.. பயணக் களைப்பில் இருந்தாலும் இந்த இரவிலும் (பன்னிரண்டு மணி) ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக சிறப்பு பேட்டி அளித்தமைக்கு மிக்க நன்றி
பாக்யராஜ் : நன்றி. ஒன் இந்தியா தமிழ் இணையத் தள வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்!