எமலோகத்தில் யார் இவரை கதை எழுத கூப்பிட்டது கே.பாக்யராஜ் மறைவால் உடைந்து அழுத டி.ராஜேந்தர்!
சென்னை: மூத்த இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்ட திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாசர், பார்த்திபன், ராதிகா, சரத்குமார், சுகாசினி உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரைத்துறை பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாக்யராஜின் சமகாலத்து நண்பரும், பிரபல இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது நண்பனின் மறைவு குறித்து நெஞ்சை உலுக்கும் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னோடு சமகாலத்தில் பணியாற்றியவர், தமிழ் திரை உலகத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்துத் தனிக் கொடி நாட்டியவர் என் இனிய நண்பர், எழுத்தாளர், இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள். அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற துக்க செய்தி என் காதுக்கு எட்டியதும் கவலை என் மனதை வாட்டியது.
டி ஆர் ராஜேந்தர்: அதற்குக் காரணம் என்னவென்றால், அண்மையில் தான் தமிழ் சினிமா உலகில் அவர் 50 ஆண்டுகாலம் பணியாற்றியதற்காக அவருக்குப் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவிலே அவரைப் பாராட்டுவதற்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். அந்த விழாவிற்கு நான் வரவேண்டும் என பாக்யராஜ் ஆசையோடு அழைத்தார். சமீபகாலமாக நான் எந்த பொது விழாவுக்கும் செல்லாமல் தவிர்த்து விடுகிறேன். ஆனால், அன்று நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை, அந்த விழாவில் நானும் கலந்து கொண்டு அவரை மனதாரப் பாராட்டினேன். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்திலேயே நம்மை விட்டு அவர் சென்று விடுவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

எமலோகத்தில் யார் அழைத்தார்கள்: ஆனால், எனக்கு ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால் அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை நான் மேடையில் மனதாரப் பாராட்டி விட்டேன் என்ற ஒரே ஒரு ஆறுதல் மட்டும் என் மனசுக்குள் இருக்கிறது. அந்த விழா மேடையிலேயே, டி.ராஜேந்தனும் நானும் இன்னும் இணைந்து பணியாற்றவில்லை எனப் பாக்யராஜ் சொல்லி இருந்தார். அவரது அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகத்தான், பாக்யராஜும் அவரது துணைவியார் பூர்ணிமாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் தான் பாடலாசிரியராக பணியாற்றி இருக்கிறேன். படம் முடியும் தருவாயில் இருக்கும் நேரத்தில், அவர் இப்படி ஒரு முடிவுரையை எழுதி விடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. எமலோகத்தில், யார் இவரை கதை, திரைக்கதை, வசனம் எழுத அழைத்தார்கள் எனத் தெரியவில்லை என்று டி.ஆர். ராஜேந்தர் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications