‘தலைவன் தலைவி‘ பாத்துட்டு விவாகரத்தானவங்க சேர்ந்துடாங்க.. இதுக்கு மேல என்ன வேணும்.. பாண்டிராஜ்!
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெள்ளிகிழமை தியேட்டரில் வெளியான படம் தலைவன் தலைவி. இதில், யோகி பாபு, தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் ஆகியோர் நடித்துள்ளனர். கணவன் மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
விஜய்சேதுபதி மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த நித்யா மேனனுக்கும் பெரியோர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது. நிச்சயத்திற்கு பின், இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். பின், விஜய்சேதுபதியின் குடும்ப பின்னணி தெரிந்து கொண்ட, நித்யா மேனனின் குடும்பம், இந்த சம்மந்தம் வேண்டாம் என்று முடிவு செய்கின்றனர். அதே போல, விஜய்சேதுபதி வீட்டிலும், நித்யா மேனனை திருமணம் செய்து கொண்டால், எதிர்காலத்தில் குடும்பத்தில் மருமகளால் பிரச்சனை ஏற்படும், குடும்பம் பிரிந்துவிடும் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோவின் குடும்பம்.

தலைவன் தலைவி கதை: ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, விஜய்சேதுபதி, நித்யா மேனனை வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார். கொஞ்ச நாள் வாழ்க்கை நன்றாக செல்ல, பின், மாமியார், மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என குடும்பத்தில் சண்டை வருகிறது. இந்த சண்டை ஒரு கட்டத்தில் பெரிதாகி விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டாம் திருமணம் நடக்க இருக்கிறது. அதன் பின்ன என்ன ஆனது.. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் 'தலைவன் தலைவி' படத்தின் கதை.
நல்ல வசூல்: இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பின் விஜய் சேதுபதி படம் முழுக்க நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் நாளில் 4.50 கோடி வசூலித்துள்ளது. நேற்றைய தினமான சனிக்கிழமை மட்டும் 6.80 கோடி வசூல் செய்து, இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 10 கோடியை தாண்டி உள்ளது. மக்களிடம் இருந்து படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனம் இருந்து வருவதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
பாண்டியராஜ் மகிழ்ச்சி: தலைவன் தலைவி படத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், மக்களோடு இணைந்து படம் பார்த்த இயக்குநர் பாண்டிராஜ், விவாகரத்து பெற்று பிரிந்த ஒரு தம்பதியினர். படம் பார்த்த பிறகு நானும் என் கணவரும் சேர்ந்து விட்டோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் எனக்கு வேறு என்ன பாராட்டு வேணும். படம் பார்த்த ஒவ்வொருவரும், ரசித்து பார்த்துவிட்டு மற்றவர்களையும் பார்க்க சொல்கிறார்கள். அதுவும் குடும்பத்தோடு பார்க்க சொல்கிறார்கள். படத்தின் ஹீரோ இப்போது ஹைதராபாத்தில் படப்பில் இருக்கிறார். அவர் போன் செய்து, அய்யா.. படம் ரொம்ப நல்ல இருக்குணு போன் வந்துகிட்டே இருக்கு, ரொம்ப நன்றி இப்படி ஒரு படத்தை எனக்கு கொடுத்ததற்கு என்றார். நானும், எனக்கு நீங்க கால்ஷீட் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று சொன்னேன் என இயக்குநர் பாண்டியராஜ் கூறினார்.


Click it and Unblock the Notifications











