கார்த்திக்காக ஜப்பான் கதை மாறுச்சு.. எல்லாமே என் தப்பு தான்.. மனம் திறந்து பேசிய ராஜு முருகன்!
சென்னை: குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகனை தமிழ் சினிமா ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், கடைசியாக கடந்த ஆண்டு கார்த்தியை வைத்து அவர் இயக்கிய ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு புதிய படத்தையும் தொடங்காமல் முடங்கிப் போய் கிடக்கிறார். இந்நிலையில், ஜப்பான் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. கார்த்தி நடிக்கும் படங்கள் கூட அவ்வப்போது வெற்றி பெற்று வரும் நிலையில், சூர்யாவுக்கு பல வருடங்களாக மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக நடித்து மிரட்டிய நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜப்பான் படத்தில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட கடத்தல்காரனாக நடித்தது அவருக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது.
பாலாவை விட டேலண்ட்: 25 ஆண்டுகளுக்கு முன்னதாக இயக்குநர் பாலாவை அடையாளம் கண்டு கொண்ட நடிகர் சிவகுமார் குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்குநர் பாலாவையே தூக்கி சாப்பிட்டு விடுவான் என பேசியிருந்தார். அந்தளவுக்கு ராஜு முருகனிடம் திரைக்கதை மற்றும் அரசியல் கருத்துக்கள் அதிகம் உள்ளதாக கூறியிருந்தார். ஜோக்கர் படத்தில் "என்னங்க சார் உங்க சட்டம்" என பாடல் வைத்தும் அந்த படத்தின் கதையே அரசியல் நய்யாண்டியாக கேள்விக் கேட்பதுமாக இருந்தது. ஜிப்ஸி படத்தில் உத்தர பிரதேசத்தின் அரசியல் வாடை ஓவராக இருந்த நிலையில், பல காட்சிகள் சென்சார் செய்யப்பட்டு படமே காலி செய்யப்பட்டது.

கார்த்திக்கு எழுதல: ஜீவாவை வைத்து ராஜு முருகன் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், கார்த்தியை வைத்து அவர் இயக்கிய ஜப்பான் திரைப்படம் அதைவிட படு தோல்வியை சந்தித்தது. அந்த படம் கார்த்திக்கு எழுதவில்லை என்றும் கார்த்தி சார் உள்ளே வந்த பிறகு, அவருக்காக கதையை கொஞ்சம் மாற்றி அமைத்தேன். ஆனால் அது பல இடங்களில் சரியாக உட்காராததால் படம் தோல்வியை தழுவி விட்டது என்றும் அதற்கு முழு பொறுப்பும் நான் தான் என்று ராஜு முருகன் கூறியுள்ளார்.
மூன்று விஷயங்கள் முக்கியம்: திரைப்படம் எடுக்க நல்ல கதை மட்டும் வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளால், படம் எடுக்க மூன்று விஷயங்கள் முக்கியம் என்பதை கற்றுக் கொண்டேன் எனக்கூறிய ராஜு முருகன், திரைக்கதை, நல்ல சூழல் மற்றும் வியாபார நோக்கத்துடன் ஒரு படத்தை அணுகுவது என அந்த விஷயங்களை கூறியுள்ளார். தயாரிப்பாளர் பணம் போட்டு படம் எடுக்கும் நிலையில், நாம் அந்த பணத்தை அவருக்கு திரும்ப லாபமாக மாற்றித்தர முடியவில்லை என்றால் படம் எடுப்பதே தவறுதான் எனக் கூறியுள்ளார். கூடிய விரைவில் ராஜு முருகன் நல்ல கதையுடன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கார்த்தியும் சர்தார் 2, கைதி 2 படங்கள் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











