RK Selvamani: மணிவண்ணன் பெஸ்ட்.. ஆனால் அவரது மரணம்.. குருநாதர் குறித்து ஆர்.கே. செல்வமணி ஓபன் பேச்சு
சென்னை: தமிழ் திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக அடிபடும் பெயர் என்றால் அது ஃபெப்சி அமைப்பின் தலைவராக உள்ள ஆர்.கே. செல்வமணி குறித்துதான். இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர். திரைப்படக் கல்லூரியில் படித்து, முதல் படமே கேப்டன் விஜயகாந்தை வைத்து இயக்கி பலரது கவனத்தை ஈர்த்தார். இவர் நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
விஜயகாந்த்தை வைத்து, தனது முதல் படம் எடுத்த அவர், விஜயகாந்த்தின் 100 வது படத்தையும் (கேப்டன் பிரபாகரன்) எடுத்தார். அந்த படத்தில் இருந்து தான், அவருக்கு கேப்டன் என்ற புனைப் பெயர் ஒட்டிக் கொண்டது. கேப்டன் விஜயகாந்த் மறைவதற்கு முன்னர் நடைபெற்ற விழாவில் கூட, கேப்டனை எங்களிடம் கொடுங்கள், நாங்கள் அவரை குணப்படுத்திக் கொடுக்கிறோம் என மனம் விட்டுப் பேசியவர் ஆர்.கே. செல்வமணி.
திடீரென ஆர்.கே. செல்வமணி பெயர் அதிகம் விவாதிக்கப்பட காரணம், 5 ஸ்டார் நிறுவனத்திற்கும் தனுஷ்கும் இடையிலான பிரச்னை குறித்து அறிக்கை வெளியிட்டது தான். தனுஷ் மீது தவறே இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இப்படியான நிலையில், அவர் அளித்த பேட்டியில், " ஃபெப்சி தலைவராக நான் எடுக்கும் முடிவுகள் பலருக்கு வருத்தத்தைக் கொடுக்கலாம். எனது அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, என் மீது கோபம் இருக்கலாம். ஆனால் நான் இந்த அமைப்பை முறைப்படுத்த வேண்டும் என்றும் சீர் படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

ஆர்.கே. செல்வமணி: தனுஷ் விவகாரம் குறித்து தெளிவாக பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடம் அவரது குருநாதரான மணிவண்ணன் குறித்து அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மத கஜ ராஜா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மணிவண்ணன் குறித்து பேசும் போது, மிகவும் சிலாகித்து பேசினார். குறிப்பாக மத கஜ ராஜா படத்தில் அவரது நடிப்பு குறித்து மனம் விட்டுப் பேசினார்.

மணிவண்ணன்: குறிப்பாக, " மத கஜ ராஜா படம் பார்த்தேன். மணிவண்ணன் சிறப்பாக நடித்திருந்தார். மணிவண்ணனும் மனோபாலாவும் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இவர்கள் இருவரையும் சுந்தர்.சி சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். மணிவண்ணன் எனது குருநாதர் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. அவர் நடிகராக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, கார் டிரைவராக இருந்தாலும் சரி, அவர் தான் பெஸ்ட். அவரைப் போல இன்னொருவர் செய்ய முடியாது.
மனோபாலா: அவரது மரணம் பெரிய இழப்பு. அவரது மரணத்தை நான் புரிந்து கொண்டேன், ஏற்றுக் கொண்டேன். ஆனால் மனோ பாலாவின் மரணத்தை தான் என்னால் இப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனோ பாலாவுடன் நான் இணைந்து படம் பண்ணியது கிடையாது. ஆனால், சங்க விஷயங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவரது மரணத்தை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் எண்ணை, நான் எனது போனில் இருந்து இன்னும் டெலிட் செய்யவில்லை" என நெகிழ்ச்சியுடன் மனம் விட்டு பகிர்ந்து கொண்டார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடிதம்: தனுஷ் விவகாரம் தொடர்பாக ஃபெப்சி அமைப்பின் தலைவர், மூத்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, 5 ஸ்டார் கதிரேசனின் மனைவி கலைச்செல்விக்கு எழுதிய கடிதத்தில், " 3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, 16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே தனுஷ்ஷிடம் ரூபாய் 16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கணவர் கதிரேசன் நிலையை சம்மேளனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அவர்களுக்கு ( தனுஷ்) எடுத்து கூறி 3 கோடிக்கு மேலாக ஒரு தொகையை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தோம்.
பணம்: நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிகபட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர். அதை Five Star நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிய கதிரேசன் ஏற்கவில்லை. கதிரேசன் என்னுடைய நெடுநாள் நண்பர் என்பதாலும், தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்ற முறையிலும், எனக்கும் நன்கு நட்புள்ளது என்பதின் அடிப்படையிலும், தனிப்பட்ட முறையில் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என முயற்சிக்கிறேன் என தெரிவித்தேன். மேலும் படப்பிடிப்பு குழுவினர் இரண்டு நாட்களுக்கு மேலாக தேனியில் காத்திருக்கின்றனர். படப்பிப்பு நடத்தாமல்,சம்மேளன தொழிலாளர்கள் காத்திருப்பதாலும், தயாரிப்பாளருக்கும் நஷ்டம், எங்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதை சம்மேளன தலைவராக நான் தெரிவித்தேன்.
நடிகர் சங்கம்: பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்க கூடாது என உங்கள் கணவர் தெரிவித்தார்.இனிமேல் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளரான உங்கள் உறுப்பினரை அழைத்துப் பேசி, நிறுத்திக் கொள்ளுங்கள். சம்மேளனம் ஆகிய நாங்கள் இனியும் படப்பிடிப்பை நிறுத்த இயலாது என்று தெரிவித்தேன். நடிகர் சங்கத்தின் சார்பில் வந்திருந்த நாசர் மற்றும் பூச்சி முருகன் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள், இரண்டு மடங்குக்கு மேல் கேட்பது நியாயம் இல்லை என்றாலும், சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி இதற்கு மேல் ஏதாவது அதிக தொகை பெற்று தர முடியுமா என பேசி பார்க்கிறோம் என்று சொல்லி சென்றார்கள்.
சாட்சி: இதை நான் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும் போது நாங்கள் தெரிவித்தோம்.ஆனால் அப்போது தங்கள் கணவர் கதிரேசன் இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக 15 கோடி தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன் என்று கூறிவிட்டார். இதில் நியாயம் இல்லை என்று நாங்களும், நடிகர் சங்கமும் நினைத்ததால் இனி இந்த பிரச்சனையில் தலையிட இயலாது என்று தங்கள் கணவரிடமும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்துவிட்டோம். தங்களை போல தங்கள் கணவரின் வேதனைக்கு சாட்சி கூற நீங்கள் வந்ததை போல நீங்கள் படும் மன உளைச்சலுக்கு சாட்சியம் சொல்ல உங்கள் பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து வந்ததை போல, மேற்கண்ட கடிதத்திற்கு புதிதாக சாட்சியம் சொல்ல நான் யாரையும் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.
பகீர்: ஏனெனில் நான் மேலே கூறிய அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருக்கும் போது நடந்த உண்மை ஆகும். எனவே நடந்த அனைத்திற்கும் அவர்களே சாட்சியம். அன்புள்ள சகோதரியே! நடந்ததில் சிறு பகுதியை மட்டுமே தங்களுக்கு, கடிதமாக எழுதி உள்ளேன். நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என்றும் எப்போதும் நட்புடனே இருக்க விரும்புகிறேன். எங்களை துண்டாதீர்கள்" என குறிப்பிட்டிருந்தார். இது பலருக்கும் பகீர் கிளப்பியது.


Click it and Unblock the Notifications











