காதல் மன்னன் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?.. கிளைமேக்ஸில் ஃபைட் வைக்க சொன்னாங்க.. இயக்குநர் சரண் பேட்டி!
சென்னை: நடிகர் அஜித்தை வைத்து இன்றைய தேதியில் படமெடுக்க வேண்டுமென்றால் அதன் பட்ஜெட் மட்டுமே சுமார் 200 கோடிக்கு மேல் இருந்தால் தான் முடியும். 1998ல் வெளியான காதல் மன்னன் படத்தின் பட்ஜெட் குறித்தும் அந்த படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்தும் இயக்குநர் சரண் பிரத்யேகமாக பிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில் இடம்பெற்ற சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்ப்போம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாறியது அஜித் மற்றும் விஜய் தான். இன்னமும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போட்டியில் இருந்துக் கொண்டே இருக்கும் நிலையில், அஜித் மற்றும் விஜய்க்கான ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக கட்டுக்கடங்காத பலத்துடன் இருக்கிறது. நடிகர் அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், தல என அழைக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஒரு இன்ச் கூட குறையாமல் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

காதல் மன்னன்: ஆணழகன் என்றும் காதல் மன்னன் என்றும் சாக்லேட் பாய் ஆகவும் ஆரம்பத்தில் வலம் வந்தவர் தான் நடிகர் அஜித்குமார். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படாத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல முன்னணி நடிகைகள் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஹீரோயின்களின் ஃபேவரைட் ஆன நடிகராக அஜித் இன்று வரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 1998-ஆம் ஆண்டு இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் குமார், மானு, எம்.எஸ். விஸ்வநாதன், விவேக் மற்றும் கரண் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர்.
காதல் மன்னன் பட்ஜெட்: நடிகர் அஜித்குமார் தற்போது ஒரு படத்துக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார். அவரை வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்க வேண்டுமென்றால் குறைந்தது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டாவது இருக்க வேண்டும். ஆனால், காதல் மன்னன் படத்தின் பட்ஜெட் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் அந்த படம் உருவாக்கப்பட்டது என்று இயக்குநர் சரண் கூறியுள்ளார். அதே பட்ஜெட்டில் தான் 2002-ல் ஜெமினி படம் உருவாக்கப்பட்டது. அப்போ காதல் மன்னன் அந்தக் காலத்தில் எவ்வளவு அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.
கிளைமாக்ஸில் சண்டை: காதல் மன்னன் படத்தின் கிளைமாக்ஸில் சண்டைக்காட்சி இருந்தால் நல்லா இருக்கும் என வினியோகஸ்தர்கள் விருப்பப்பட்டனர். தயாரிப்பாளரும் அதைக் கேட்டுவிட்டு கரணுக்கும் அஜித்துக்கும் ஃபைட் வைத்து விடலாமா என கேட்டார். ஆனால் நான் முடியவே முடியாது என சொல்லிவிட்டேன். காலம் கடந்து பார்த்தாலும் காதல் மன்னன் பேசப்பட வேண்டுமென்றால் அந்த படத்தின் கிளைமாக்ஸில் சண்டைக்காட்சி இருக்கக்கூடாது எனக் கருதினேன். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இன்றுவரை அந்த படம் பேசப்படுவதற்கு காரணமே தேவையில்லாத எந்த ஒரு விஷயத்தையும் கமர்சியலுக்காக திணிக்கவில்லை என்பதால் தான் என சரண் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன: காதல் மன்னன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தின் அமர்க்களம் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார். அடுத்து சியான் விக்ரமை வைத்து ஜெமினி, கமல்ஹாசனை வைத்து வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களை இயக்க வாய்ப்புகள் வர காரணமே காதல் மன்னன் தந்த வெற்றி தான் என்றார்.


Click it and Unblock the Notifications











