அம்மாவை தியாகியா மட்டுமே பார்க்காதீங்க.. 42 வயதானாலும் பெண்ணுக்கு அது தேவை.. சசி பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன்' எனத் தொட்டதெல்லாம் பொன்னாக்கிய எமோஷனல் ஹிட் இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் நூறு சாமி. தியேட்டர்களில் ரிலீஸான நாள் முதலே, இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் மாபெரும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக, இரண்டு மகன்களின் தாயாக நடித்திருக்கும் சுவாசிகாவின் நடிப்புக்கு விருது நிச்சயம் எனக் கூறி வரும் நிலையில், இந்தத் திரைப்படத்தின் அதிர்வலையூட்டும் மையக்கருத்து குறித்து இயக்குனர் சசி பேட்டி இணையத்தில் பலரை யோசிக்க வைத்துள்ளது.
பிச்சைக்காரன் டூ நூறு சாமி: படம் குறித்துப் பேசிய இயக்குனர் சசி, என்னுடைய முந்தைய பிச்சைக்காரன் படம் என்பது அம்மாவின் பாசத்தையும், தியாகத்தையும் மட்டுமே உருகி உருகிப் பேசும் ஒரு காவியமாக இருக்கும். ஆனால், இந்த 'நூறு சாமி' படம் என்பது அம்மாவை வெறும் தியாக உருவமாக மட்டும் பார்க்காமல், அவளையும் ஒரு சாதாரண மனுஷியாக நினைக்க வேண்டும் என்ற உன்னதமான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். இந்தத் திரைப்படத்தில் பல விஷயங்களைச் சமுதாயத்திற்குத் தேவையான வரிகளாக நான் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன். கல்யாணம் என்பது ஏதோ குறிப்பிட்ட வயது வந்துவிட்டதால் செய்யக்கூடிய ஒரு சடங்கு கிடையாது, அது ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமே தேவையான மிக முக்கியமான ஒன்று.

முகம் சுளிக்காதபடி: உடல் தேவை என்பது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இயற்கையாகவே தேவையான ஒன்று. முதலில் அதை நாம் எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கைக்குச் சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, தூக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேபோலத்தான் உடல் தேவையும் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது. இதைத்தான் மக்கள் மனம் கோணாதபடி, யாரும் தியேட்டரில் முகம் சுளிக்காதபடி, மிக நேர்த்தியான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், இதுதான் இந்த நூறு சாமி படத்தினுடைய 'கோர் பாயிண்ட்'. உடல் தேவை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று, ஒரு பெண்ணுக்கும் அந்த உணர்வுகள் இருக்கிறது. அவளுக்கு 42 வயதோ அல்லது 60 வயதோ ஆகிவிட்டாலும் அவளது தனிமைக்கும், தேவைக்கும் ஒரு துணை அவசியம் என்பதை மிகத் துணிச்சலாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் இந்த நூறு சாமி என்று இயக்குனர் சசி பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications