Paramasivan Fathima: மதமாற்றத்தை பேசினால் சங்கியா ? சர்ச்சையாகும் பரமசிவன் பாத்திமா படம்!
சென்னை: குடிமகன், பெட்டிக்கடை, பகிரி போன்ற படங்களை இயக்கிய இசக்கி கர்வண்ணன் இயக்கி இருக்கும் திரைப்படம் 'பரமசிவன் பாத்திமா'. இதில், விமல், சாயாதேவி, எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, கூல் சுரேஷ், காதல் சுகுமார், அதிரா, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் இடம் பெறும் சில வசனங்கள் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சில மதங்கள் பணம் கொடுத்து மக்களை மதம் மாற்றுகிறது, அப்படி பணத்திற்காக மதம் மாறியவர் மனதளவில் மாறவில்லை என்பதைத்தான் நான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், இந்த படத்தில் நடித்த நடிகர் சுகுமாரும், ஆதிரா என்ற நடிகை, இன்னும் சிலரும் இப்படி மதம் மாறி இருக்கிறார்கள். அதைத்தான் படமாக எடுத்தேன். காலம் காலமாக என் மண் சார்ந்து நடக்கும் விஷயத்தான் செய்தாலும், பேசினாலும், நெற்றியில் குங்குமமோ, விபூதியோ வைத்தால் உடனே சங்கி என்று சொல்லிவிடுகிறார்கள்.

பரமசிவன் பாத்திமா: இந்த படத்தை வெளியிடுவதற்காக நான், படாத பாடுபட்டேன் தணிக்கை குழுவிற்காக மட்டுமே மூன்று மாதம் காத்திருந்தேன். இந்த திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தியேட்டரில் படம் பார்க்க வந்திருந்தார்கள். ஆனால், 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டதால், அவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படவில்லை. பரமசிவன் பாத்திமா படத்தில் எந்த இடத்திலும், ஆபாசமோ, கெட்ட வார்த்தையோ, வன்முறையோ இல்லை. ஆனால், அவர்கள் படத்தையே வன்முறை படமாக நினைத்து 'ஏ' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் தணிக்கை குழுவில் 4 பேர் படத்தை பார்த்தார்கள், பின் பத்து பேர் குழு படத்தை பார்த்து விட்டு 'ஏ' சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள். தணிக்கை குழு இப்படி செய்ததால், நான் இந்த படத்தை தொலைக்காட்சிக்கு விற்க முடியவில்லை. வெளிநாட்டுக்கு விற்க முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளரே நான் தான், இதனால், நான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
சங்கியா?: இந்த படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் என்னை மிகவும் பாதிக்கிறது. இந்த மண்ணின் பெருமை, இதுதான் தமிழனின் அடையாளம் என்று சொன்னால் உடனே என்னை சங்கி என்கிறார்கள். இந்த படத்தை பெரும்பாலான கிறிஸ்துவ மக்கள் பாராட்டினார்கள். ஆனால், திராவிடம் பெருமை பேசும் சிலர் படத்தை எதிர்க்கிறார்கள். இந்த திராவிடம் தான் என் மக்கள், என் சித்தனையை, என் வரலாறு அனைத்தையும் அழைத்துவிட்டது, இது மாற வேண்டும் என்றால், இதுபோன்ற படங்கள் வெளிவர வேண்டும் என்று இயக்குநர் இசக்கி கர்வண்ணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
படத்தின் கதை: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் மதத்தால் பிரிவினை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் அடிக்கடி சண்டைகள் நடந்த கொண்ட இருக்கிறது. இதில் விமல் மற்றும் சாயாதேவி இருவரும் இரு இளைஞர்களை கொலை செய்து விடுகின்றனர். அதோடு மேலும் சில கொலைகள் செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த கொலை வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் வருகிறார். யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியில் கொலைக்கான காரணம் என்ன, அவர்களுக்கும் விமல் மற்றும் சாயா தேவிக்கு என்ன பகை என்பது தான் படத்தின் கதை.


Click it and Unblock the Notifications











