தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுக்கும்போதே அதை பண்ணியிருக்கணும்.. தயாரிப்பாளர் பிரச்சனை.. சரத்குமார் பதில்!
சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தும் படத்தில் இடம்பெறுவார் என மில்டன் கூறியுள்ளார்.
மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் தொடர்பாக பிலிமிபீட் தமிழ் யூடியூப் சேனலுக்கு நடிகர் சரத்குமார் அளித்த பிரத்யேக பேட்டியில் வயநாடு நிலச்சரிவு, சண்டை பயிற்சியாளர் ஏழுமலை மரணம், ஜக்குபாய் படத்தின் தோல்விக்கான காரணம் மற்றும் தனுஷ் பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி ஓபனாக சரத்குமார் பேசியுள்ளார்.

சமீபத்தில் தனது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு அதிக பொருட்செலவில் தாய்லாந்தில் திருமணத்தை நடத்தியிருந்தார். மேலும், சென்னையில் ரஜினிகாந்த் முதல் திரிஷா வரை பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வயநாட்டில் இப்போ மழை பிடிக்காது: பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தையும் இயக்கியுள்ளார். மழை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, சிறு வயதில் இருந்தே மழையில் ஆட்டம் போட பிடிக்கும். ஆனால், மழை பிடிக்காத மனிதர்களும் உள்ளனர். வயநாட்டில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்தது பதை பதைக்க வைக்கிறது. இயற்கை சீற்றத்தை எதுவுமே செய்ய முடியாது. திடீரென அதிகளவில் மழை பெய்தால் என்ன பண்ண முடியும் என பேசியுள்ளார்.
எனக்கே கழுத்து உடைஞ்சிருக்கு: சினிமாவில் தற்போது ரோப் உள்ளிட்ட நிறைய வசதிகள் வந்த பின்னரும், அலட்சியமாக சண்டை பயிற்சியாளர்களை கையாள்வது தவறான விஷயம். அந்த காலத்தில் ரோப் எல்லாம் கிடையாது. எத்தனை அடி உயரமாக இருந்தாலும், குதியென்றால் குதிக்க வேண்டும். ஒரு முறை உரிய பாதுகாப்பு இல்லாமல் குதித்ததில் அடிபட்டு எனக்கு கழுத்தே உடைஞ்சிடுச்சு. ஏழுமலையின் மரணம் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டது. ரிஸ்க்கான வேலை செய்பவர்களுக்கு உரிய அனைத்து சேஃப்ட்டிகளையும் தயாரிப்பாளர்கள் செய்ய வேண்டும். மருத்துவ குழு இருப்பது அவசியம். திடீரென ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக படப்பிடிப்பு தளத்தில் முதலுதவி தருவது அவசியம் எனக் கூறியுள்ளார்.
தனுஷ் vs தயாரிப்பாளர் சங்கம்: நடிகர் தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து பேசிய சரத்குமார், தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும் போதே தனுஷிடம் கால்ஷீட்டையும் எழுதி வாங்கியிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்றும் ஹீரோ எப்போ வேண்டுமானால் டேட் கொடுத்தால் போதும் என அட்வான்ஸ் கொடுப்பது. அதன் பின்னர், அவர் பிஸியாகி விட்டால் பிரச்சனை செய்வது என்பது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது என்றார். இதனை நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் கலந்து ஆலோசித்து சுமுகமான முடிவை எடுக்க முன் வரவேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.
கைவசம்: பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம்பொருள், ஹிட் லிஸ்ட், மழை பிடிக்காத மனிதன் என பல படங்களில் நடித்துள்ள சரத்குமார் கைவசம் மேலும், அரை டஜன் படங்களில் நடித்து வருகிறாராம். மேலும், கூடிய சீக்கிரமே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











