அம்மா குடித்துவிட்டு அடிப்பாங்க.. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.. ஃபயர் நடிகர் பாலாஜி முருகதாஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, நடிகர் ஆரி அர்ஜுனுடன் மோதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் ஃபயர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதில், பாலாஜி முருகதாஸ், காசி என்கிற ரோலில் நடித்து அனைவரிடம் பாராட்டை பெற்றார். தற்போது, கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வாழ்க்கையில் சந்தித்த பல விஷயத்தை கண்கலங்கி பேசி உள்ளார்.
அதில், நான் 18 வயதில் மாடலிங் துறையில் நுழைந்தேன், அப்போது மாடலிங் என்றால் பெரிதாக எந்த புரிதலுமே இல்லை. போட்டோஷூட்டில் இருந்து தான் எனது மாடலிங் தொழிலை நான் ஆரம்பித்தேன். அப்போது ஒரு நாளைக்கு 100 ஷர்ட்டுகளை மாற்றி மாற்றி புகைப்படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். காலையில் 9 மணிக்கு தொடங்கினால் இரவு 9 மணி வரை அந்த போட்டோஷூட் சென்று கொண்டே இருக்கும். இந்த நேரத்தில், என் உடலை சரியாக பராமரித்துக்கொள்வதற்கு கூட என்னால் முடியாது. என் குடும்பத்தில் பெரும் வறுமை இருந்ததால், நான் சம்பாதித்து வீட்டிற்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

பாலாஜி முருகதாஸ்: என்னுடைய அப்பா செஃப்பாக இருந்தார், அவரின் முழு நேர தொழில் செஃப்பாக இருந்தாலும், பாதி நேரம் அவர் சரக்கு அடித்துக் கொண்டுதான் இருப்பார். இதனால், அவருடைய சம்பளம் அதற்கே சரியாக விடும். இதனால், என்னுடைய அம்மாவிற்கும் குடிப்பழக்கம் வந்துவிட்டது. நான் தினமும் என் அம்மாவிடம் 200 ரூபாய் கொடுத்தால் எனக்கு சாப்பாடே போடுவார்கள். இதனால் நான், 'அம்மா ஹோட்டலில்' சப்பாத்தி வாங்கி சாப்பிடுவேன். அப்படித்தான் என்னுடைய உடலை நான் கவனித்துக்கொண்டேன்.
பிரேக் அப்: நான் பத்தாவது படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால், அந்த லவ் பிரேக் அப் ஆகிவிட்டது. அதேபோல நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது உருகி உருகி ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். அந்த பெண்ணை ஒரு முறை நான் வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தேன். அப்போது, அம்மா சரக்கு அடித்து விட்டு ஒரு பக்கம் இருந்தார்கள். அப்பா ஒரு பக்கம் சரக்கு அடித்து விட்டு இருந்தார். இதை எல்லாம் பார்த்த அவள், என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை, அன்று போனவள் தான் இதுவரையிலும் நான் அவளை பார்க்கவே இல்லை. பலமுறை அவளிடம் பேசுவதற்காகவும் முயற்சி செய்தேன். ஆனால், அது நடக்கவேயில்லை அதுதான் என் வாழ்க்கையில் பெரிய வலியாக இருந்தது. அந்த வலியை மறக்க தினமும் குடிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், இது ரொம்ப பெரிய தவறு என நானே உணர்ந்தேன். அந்த வலியை மறக்க தினமும் 9 மணி நேரம் ஜிம்மில் உடல் பயிற்சி செய்து, அந்த வலியை மறந்தேன்.
ஒழுக்கம் இல்லாத பெற்றோர்: நான் பிக் பாஸில் இருந்து வந்த பிறகு என்னுடைய அப்பா இறந்து விட்டார். அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து என்னுடைய அம்மாவும் இறந்து விட்டார்கள். என் அம்மாவிடம் நான் எப்போதுமே லோக்கல் சரக்கு அடிக்காதீர்கள், உங்களுக்கு வேண்டுமென்றால் நான் ஃபாரின் சரக்கு வாங்கி கொடுக்கிறேன். அதை அடிங்கள் என்று சொல்வேன். ஆனால், அவர்கள் சரக்கு அடித்தடித்து இறந்து விட்டார்கள். இது எனக்கு மிகப்பெரிய வலியாகத்தான் இருந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம், அவர்கள் இருவரிடமும் அந்த ஒழுக்கம் இல்லை. எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டு, சரக்கு அடித்துக் கொண்டு இருப்பார்கள். என் அப்பா, அம்மாவை பார்த்துத்தான் வாழ்க்கையில் எப்படி இருக்கக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். எப்போதும் என் வலியை, நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை. அனைத்தையும் என் மனதிற்குள் தான் வைத்து இருப்பேன் என்று பாலாஜி முருகதாஸ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











