தொப்புளா? மார்பகமா? - தென்னிந்தியா vs பாலிவுட் இந்த லட்சணத்தில் தான் இருக்கு.. பளார் விட்ட டாப்ஸி
மும்பை: இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பண்ணு, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் நடிகைகள் நடத்தப்படும் விதம் குறித்து மிகவும் வெளிப்படையாகவும், அதிரடியாகவும் பேசியுள்ளார். இது தொடர்பான அவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் தனது 'அஸி' (Assi) பட ப்ரோமோஷனுக்காக பேட்டி அளித்த டாப்ஸி, தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் பெண்களின் உடல் பாகங்கள் எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது என்பது குறித்து தனது கசப்பான அனுபவத்தையும் எண்ணத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "இந்திய திரையுலகில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண்ணின் உடலை ஒரு விதமாக பார்க்கிறார்கள். தென்னிந்திய திரையுலகில் பெரும்பாலும் பெண்களின் இடுப்பு மற்றும் தொப்புள் பகுதியை முன்னிலைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், பாலிவுட்டில் நிலைமை அப்படியே தலைகீழ். அங்கே 'க்ளீவேஜ்' எனப்படும் மார்பகப் பகுதியை காட்சிகளில் திணித்துக் காட்டுவதிலேயே இயக்குநர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்," எனப் போட்டு உடைத்துள்ளார்.

தர்ம சங்கடம்: அதேபோல், படப்பிடிப்புத் தளத்தில் நடிகைகள் எதிர்கொள்ளும் தர்ம சங்கடமான சூழல் குறித்தும் அவர் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, சில இயக்குநர்கள் நடிகைகளை 'பேடட் ப்ரா' அணியுமாறு வற்புறுத்துவதாகவும், ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு செட்டில், எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இத்தகைய மாற்றங்களைச் செய்யச் சொல்வது மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதில் என்ன கவர்ச்சி: தனது ஆரம்பகால சினிமா அனுபவம் ஒன்றைப் பகிர்ந்த டாப்ஸி, "ஒருமுறை ஒரு இயக்குநர் எனது வயிற்றில் தேங்காயைப் போட்டு அடிப்பது போன்ற காட்சியை எடுத்தார். அதை ஏதோ கவர்ச்சியான காட்சி என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை, இதனால் நான் முதலில் இயக்குநரிடம் சண்டைக்கு எல்லாம் சென்றுள்ளேன்.
இன்றைக்கு நிலைமை வேறு: மேலும் அன்று சினிமா வாய்ப்புகள் போய்விடக் கூடாது என்பதற்காக அந்த இயக்குநரிடம் மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்ட அவர், இப்போது நிலைமை மாறிவிட்டதால், திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் இத்தகைய சங்கடங்களை உலகிற்கு தெரியப்படுத்த தனது குரலை உயர்த்தி வருவதாக தெரிவித்துள்ளார். சினிமா என்பது வெறும் கவர்ச்சி மட்டுமே அல்ல, அது பெண்களின் கண்ணியத்தையும் போற்ற வேண்டும் என்ற ரீதியில் டாப்ஸி பேசியுள்ள இந்தக் கருத்துக்கள் தற்போது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











